Last Updated : 13 Aug, 2025 06:45 PM

4  

Published : 13 Aug 2025 06:45 PM
Last Updated : 13 Aug 2025 06:45 PM

தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவு: கைது செய்ய காவல் துறை ஆயத்தம் - ரிப்பன் மாளிகையில் பரபரப்பு

சென்னை: ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கைது செய்யவும் போலீஸார் ஆயத்தமாகி வருகின்றனர்.

சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு விட்​டதை கண்​டித்​தும், பணி நிரந்​தரம் கோரி​யும், ஏற்​கெனவே என்யூஎல்எம் திட்​டம் மூலம் வழங்கப்பட்ட தூய்​மைப் பணியை தொடர வலி​யுறுத்​தி​யும் தூய்​மைப் பணியாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்​பு, இரவு பகலாக அங்​கேயே தங்​கி இன்று 13-வது நாளாக போராட்​டம் நடத்தி வருகின்றனர்.

இது​வரை பல கட்ட பேச்​சு​வார்த்​தைகள் முடிந்​து, தீர்வு எட்​டப்​பட​வில்லை. இந்த நிலையில், இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காவல் துறை ஆயத்தமாகி வருகிறது.

இதனையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் ரிப்பன் மாளிகை முழுவதுமாக காவல் துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தூய்மைப் பணியாளர்களை கைது செய்து அழைத்துச் செல்ல 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்லுமாறு காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல மறுக்கும் நிலையில், போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். போராட்டம் நடத்திவரும் அனைவரும் கலைந்து செல்லவேண்டுமென்றும், இல்லையெனில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல் இணை ஆணையர் விஜயகுமார் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதேபோல, மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மற்றொரு வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x