Published : 13 Aug 2025 06:02 AM
Last Updated : 13 Aug 2025 06:02 AM
மதுரை: பழநி முருகன் கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டும் விவகாரத்தில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை எழுமலையைச் சேர்ந்தராம ரவிக்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிதியில் இருந்து ரூ.4.54 கோடி மதிப்பில், உத்தமபாளையத்தில் திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அறநிலையத் துறை விதிகளுக்கு எதிரானது. கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டக் கூடாது.
ரூ.400 கோடி நிதி... உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் மற்றும் நரசிங்க பெருமாள் கோயில் பெயரில் உத்தேசமாக ரூ.400 கோடி நிதி உள்ளது. இதனால் இக்கோயில் வறுமை நிலையில் இருக்கும் கோயிலாக கருத முடியாது. தற்போது கோயில் சார்பு இல்லாமல் மண்டபம், கல்லூரி, மருத்துவமனை, கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதை ஏற்க முடியாது. எனவே பழநி கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையைசட்ட விரோதம் என அறிவித்து, திருமண மண்டபம் கட்ட தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், “பழநி கோயில்நிதியில் உத்தமபாளையத்தில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். மனு தொடர்பாக பழநி கோயில் செயல் அலுவலர் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வரும் 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT