Published : 12 Aug 2025 05:52 AM
Last Updated : 12 Aug 2025 05:52 AM

அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: இபிஎஸ் வாக்குறுதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் நேற்று பொதுமக்களிடையே பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. | படம்: கி.ஜெயகாந்தன் |

கிருஷ்ணகிரி/ஓசூர்: அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செய லாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று தொடங்கினார்.

இதில், ராயக்கோட்டையில் அவர் பேசியதாவது: மலர் விவசாயிகளுக்காக ஓசூரில் ரூ.20 கோடியில் சர்வதேச பன்னாட்டு மலர் ஏல மையத்தை அதிமுக ஆட்சியில் திறந்து வைத்தோம். ஆனால், அந்த மையத்தை திமுக அரசு மூடி வைத்துள்ளது. நிகழாண்டில் மா மகசூல் அதிகரித்து கடும் விலை வீழ்ச்சியடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மாங்கனி கொள்முதல் விலையை கிலோ ரூ.13 என நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தினோம்.

ஆனால், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. தற்போது, விவசாயத்துக்கு சுழற்சி முறையில் மும்முனை மின்சாரம் வழn்கப்படுகிறது. திமுக ஆட்சியில் விவசாயிகள் படும் துன்பங்கள், துயரங்களைக் கண்டு கொள்வதில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும், மா விவசாயிகளுக்கு விடிவு காலம் பிறக்கும். 24 மணி நேரமும் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

அனைத்து ஏழைகள், பட்டியல், பழங்குடியின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். குறிப்பாக வீட்டுமனை இல்லாவிட்டாலும், நிலம் வழங்கி வீடுகளைக் கட்டித் தருவோம். விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்களை 5 ஆண்டுகளில் 2 முறை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் தாய்மார்களுக்கு தரமான சேலை வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, தேன்கனிக் கோட்டையில் பேசும்போது, “நான் பேருந்து எடுத்து கொண்டு புறப்பட்டதால், ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்பதற்கு மக்களே சாட்சி. திமுக, கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி மக்களை நம்பி உள்ளது. 2026-ல் சட்டப்பேரவை தேர்தலில் திமுக 200 இடங்களில் வெல்லும் என ஸ்டாலின் பொய் சொல்கிறார்.

ஆனால், அதிமுக- பாஜக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். மத்திய அரசுடன் அதிமுக இணக்கமாக இருந்து ஆட்சி செய்து, தமிழகம் ஏற்றம் பெற்றது. ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றவே, அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளது” என்றார்.

பின்னர், ஓசூர் மற்றும் சூளகிரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ணரெட்டி மற்றும் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x