Published : 10 Aug 2025 12:36 AM
Last Updated : 10 Aug 2025 12:36 AM
சென்னை: வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 26 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல்13-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதேபோல, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடலில் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
மன்னையில் 11 செ.மீ. மழை: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 11 செ.மீ.,கடலூர் மாவட்டம் காட்டுமயிலூரில் 10 செ.மீ., வேப்பூர், நெய்வேலி, மாத்தூரில் 9 செ.மீ., பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் 8 செ.மீ., மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணை,தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, கடலூர் மாவட்டம் குப்பநத்தம் ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழை பதிவானது.
பாளையங்கோட்டையில் நேற்று அதிகபட்சமாக 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 21.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT