Published : 09 Aug 2025 04:45 PM
Last Updated : 09 Aug 2025 04:45 PM

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.10) முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்ளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு கடலோர ஆந்திரபிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மாறுநாள் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

12 முதல் 15-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 13-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 11 செமீ, கடலூர் மாவட்டம் காட்டுமயிலூரில் 10 செமீ, வேப்பூர், நெய்வேலி, மாத்தூர் ஆகிய இடங்களில் தலா 9 செமீ, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஆகிய இடங்களில் தலா 8 செமீ, மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பார் அணை, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, கடலூர் மாவட்டம் குப்பநத்தம் ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x