Published : 09 Aug 2025 03:14 PM
Last Updated : 09 Aug 2025 03:14 PM
சென்னை: சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவுக்கு திமுகவில் மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த திமுக இலக்கிய அணித்தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நியமிக்கப்படுகிறார். திமுக சட்ட திட்ட விதி 31, பிரிவு 10-ன்படி தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அ. அன்வர்ராஜா தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த அன்வர் ராஜா? - எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய நாள் முதலே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்தவர் அன்வர் ராஜா. ராமநாதபுரத்தில் செல்வாக்கு மிகுந்த நபராக அறியப்படுகிறார். மிகச் சிறந்த சொற்பொழிவாளரும் கூட.
1986 உள்ளாட்சித் தேர்தலில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அரசியலில் அடியெடுத்து வைத்த அவர் படிப்படியாக உயர்ந்து சட்டமன்ற உறுப்பினரானார். கடந்த 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா ஆட்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தார். 2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் முகம்மது ஜலீலை தோற்கடித்து 16-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா பக்கம் நின்றதால் கடந்த 2021 டிசம்பர் 1-ம் தேதி இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு கடந்த, 2023ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து சிஏஏ, வக்ஃப் திருத்தம் உள்ளிட்ட சட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்தார். அதிமுகவின் சிறுபான்மை சமூகத்தின் முகமாக அறியப்பட்டவர். அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்ததைத் தொடர்ந்து அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 21ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த a மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT