Published : 08 Aug 2025 05:48 AM
Last Updated : 08 Aug 2025 05:48 AM

திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு

மதுரை: திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. ​

திருச்சி காஜா மலை பகு​தி​யில் உள்ள எஸ்ஆர்எம் ஓட்​டலின் குத்​தகை காலம் முடிவடைந்த நிலை​யில், அதை காலி செய்​யு​மாறு ஓட்​டல் நிர்​வாகத்​துக்கு சுற்​றுலா துறை உத்​தர​விட்​டது. இதை ரத்து செய்​யக் கோரி ஓட்​டல் நிர்​வாகம் சார்​பில், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்யப்பட்டது.

இந்த மனு தனி நீதிபதி முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​த​போது, குத்​தகை காலத்தை நீட்​டிக்க மறுத்து அரசு பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்து உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை ரத்து செய்​யக் கோரி தமிழ்​நாடு சுற்​றுலாகழகம் சார்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அதில், “அரசு குத்​தகை காலத்தை நீட்​டிக்க விரும்​ப​வில்​லை. அந்த ஓட்​டலை சுற்​றுலா கழகமே ஏற்று நடத்த வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டது. இந்த முடிவை கும்கி பட யானை​யுடன் ஒப்​பிட்டு தனி நீதிபதி கருத்து தெரி​வித்​துள்​ளார்.

அதில், கோயில் யானையை கும்கி யானை​யாக பயன்​படுத்​து​வதை​யும், இறு​தி​யில் கும்கி யானை இறந்​து​போவதை​யும் சுட்​டிக்​காட்டி சுற்​றுலாத் துறை ஓட்​டல் நடத்த முன்​வந்​திருப்​பதை விமர்​சனம் செய்​துள்​ளார். இது சரியல்ல. இதனால் தனி நீதிபதி உத்​தர​வில் இடம் பெற்​றுள்ள அந்த கருத்​துகளை நீக்​க​வும், தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்​தும் உத்​தர​விட வேண்​டும்” எனக் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் ஏ.டி ஜெகதீஸ் சந்​தி​ரா, நீதிபதி ஆர்​.பூர்​ணிமா அமர்வு விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: குத்​தகை உரிமம் முடிந்த பிறகு அதை நீட்​டிப்​பதை உரிமை​யாக கருத முடி​யாது. அது முழுக்க முழுக்க அரசின் முடிவு.

தமிழ்​நாடு சுற்​றுலா கழகம் 1971 முதல் பல்​வேறு இடங்​களில் ஓட்​டல்​களை நடத்தி வரு​கிறது. கடந்த 2023-24-ல் ரூ.32.33 கோடி வருமானம் ஈட்​டி​யுள்​ளது. இதனால் தமிழ்​நாடு சுற்​றுலாத் துறை ஓட்​டல் நடத்​தும் விவ​காரம் தொடர்​பாக தனி நீதிபதி தெரி​வித்த கருத்​துகள் அவரது தனிப்​பட்ட கருத்​தாக இருக்​கலாம்.

எஸ்​ஆர்​எம் ஓட்​டல் குத்​தகை காலத்தை நீட்​டிக்க மறுத்து அரசு பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்​பித்த உத்தரவு ரத்து செய்​யப்​படு​கிறது. தமிழக சுற்​றுலாத் துறை ஓட்​டல்​கள் நடத்​து​வது தொடர்​பாக தனி நீதிபதி தெரி​வித்த கருத்​துகள் நீக்​கப்​படு​கின்​றன. மேல்​முறை​யீடு மனு ஏற்​கப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ கூறியுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x