Published : 07 Aug 2025 06:04 AM
Last Updated : 07 Aug 2025 06:04 AM
சென்னை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு இச்சம்பவம் உதாரணம். காவல் துறையினருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டம்- ஒழுங்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் திமுக அரசு முன்வர வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: அனைத்துப் பிரிவினரையும் அவதிக்குள்ளாக்கும் திமுக ஆட்சி எப்போது முடியும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பாமக தலைவர் அன்புமணி: காவல் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தி, மக்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தத் தவறியதற்காக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இதேபோல, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT