Last Updated : 06 Aug, 2025 03:12 PM

 

Published : 06 Aug 2025 03:12 PM
Last Updated : 06 Aug 2025 03:12 PM

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட நபரால் பரபரப்பு: ஆணையர் விளக்கம்

மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர். அருகில் துணை ஆணையர் கார்த்திகேயன். | படம் : ஜெ.மனோகரன்

கோவை: கோவையில் உள்ள கடைவீதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அறையில் ஒரு நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட கடைவீதி காவல் நிலையம் வைசியாள் வீதியில் இயங்கி வருகிறது. இங்கு சட்டம் ஒழுங்கு, விசாரணை பிரிவு, போக்குவரத்து ஆகிய காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், இன்று (ஆக.6) காலை வழக்கமான ரோல் கால் பணிகள் முடிந்தவுடன் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் தங்கள் அறைக்கு திரும்பினர். அதன்படி, முதல் மாடியில் உள்ள விசாரணை பிரிவு உதவி ஆய்வாளர் அறைக்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சென்றுள்ளார்.

அப்பொழுது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர் கதவு வழியாக உள்ளே பார்த்த பொழுது உள்ளே ஒரு நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு போலீஸார் மேலே வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தனர். அங்கு வேட்டியால் ஒரு நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்தார். அவரது சடலத்தை போலீஸார் மீட்டனர்.

அவரது உடையில் ஒரு டைரி இருந்தது. அதில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு போலீஸார் விசாரித்தனர். அந்த விசாரணையில் உயிரிழந்த நபர் பேரூர் அருகே உள்ள சாமி செட்டிபாளையத்தைச் சேர்ந்த அறிவொளி ராஜன்(60) எனத் தெரிய வந்தது.

கூலி தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார். மேலும் மனநிலையும் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. தன்னை யாரோ துரத்துகிறார்கள், தாக்க முயற்சி பண்ணுகிறார்கள் என்றெல்லாம் வீட்டில் இருந்தவர்களிடம் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (ஆக.5) வீட்டைவிட்டு வெளியேறியவர் கடைவீதி காவல் நிலையத்துக்கு வந்து, யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்து, உதவி ஆய்வாளர் அறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் துணை ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர் .

இச்சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறும்போது, “காவல் நிலையத்தின் வெளிப்பகுதியில் முதல் மாடி தளத்திற்கு செல்வதற்காக ஒரு படிக்கட்டு பாதை உள்ளது. நேற்று இரவு சென்ட்ரிங் பணியில் ஒரு காவலர் இருந்திருக்கிறார். அவருக்கு தெரியாமல் இந்த நபர் முதல் மாடி வழியாக படிக்கட்டு வழியாக உள்ளே நுழைந்து உதவி ஆய்வாளர் அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் நேற்று இரவு 11.04 மணிக்கு டவுன்ஹாலில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு சென்று 10 நிமிடம் உள்ளே அமர்ந்துவிட்டு வெளியே வந்துள்ளார். பின்னர் இரவு 11.19 மணிக்கு கடை வீதி காவல் நிலையத்துக்குள் நுழைந்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. பணியில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x