Published : 06 Aug 2025 09:31 AM
Last Updated : 06 Aug 2025 09:31 AM
சில தலைவர்கள் சொந்தக் கட்சியை வளர்க்க மெனக்கிடுவார்கள். ஆனால், தங்கள் கட்சியை வளர்க்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மெனக்கிட்டு வேலை செய்வதாக உற்சாகப்படுகிறார்கள் தருமபுரி பாமக-வினர்.
தருமபுரி மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் எம்ஆர்கே, தருமபுரிக்கு வரும்போதெல்லாம் பாமக-வினரை சீண்டுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், பாமக-வை தாக்குவதாக நினைத்துக் கொண்டு அவர் தெரிவிக்கும் கருத்துகளால் தங்கள் கட்சியின் வலிமை அதிகரித்து வருவதாகவும், வேற்றுமைகளை மறந்து தங்களை ஒற்றுமைப்படுத்தி வருவதாகவும் மாவட்ட பாமக-வினர் மகிழ்ந்துபோய்ச் சொல்கிறார்கள்.
ஏற்கெனவே, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி விழாவில், “இப்போ ரெண்டு மாங்கா” என பாமக-வுக்குள் நடக்கும் உட்கட்சி மோதலை கிண்டலடித்து பேசியதால் பாமக-வினரின் ‘கரி’சனத்துக்கு உள்ளானார் எம்ஆர்கே. இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி ஒகேனக்கல்லில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில், பாமக கவுரவ தலைவரான ஜி.கே.மணி எம்எல்ஏ-வையும் மேடையில் வைத்துக்கொண்டு பேசிய எம்ஆர்கே, அன்புமணி தொடங்கியிருக்கும் உரிமை மீட்பு நடைபயணம் குறித்து தரமற்ற வார்த்தைகளால் விமர்சித்தார்.
அத்துடன், “எடப்பாடி பழனிசாமி ‘சுந்தரா டிராவல்ஸ்’ போன்ற ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு காமெடி பீஸ் போல மைக் செட்டை எல்லாம் மாட்டிக் கொண்டு திமுக ஆட்சியை குறை சொல்கிறார். அதிமுக-வின் பி டீமான பாமக தற்போது எதற்காக நடைபயணம் செல்கிறது..?” என்றெல்லாம் அதிமுக-வையும் சேர்த்து வம்புக்கிழுத்தார்.
எம்ஆர்கே-யின் இந்தப் பேச்சை கண்டித்து தருமபுரி மேற்கு மாவட்ட பாமக துணைத் தலைவரான ஏரியூர் மந்திரி படையாட்சி உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்களை பதிவிட்டனர். இதையடுத்து பென்னாகரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மடம் முருகேசன் போலீஸில் புகாரளித்தார். உடனே பறந்து வந்த போலீஸ், மந்திரி படையாட்சியை விசாரணைக்காக அள்ளிச் சென்றது. இதையறிந்த பாமக-வினர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மந்திரியை போலீஸ் சொந்த ஜாமீனில் விடுவித்தது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மந்திரி படையாட்சி, “ரகசிய காப்புப் பிரமாணம், உறுதிமொழி எல்லாம் எடுத்துக்கொண்ட ஓர் அமைச்சர் அரசு விழாவில் எதைப் பேசவேண்டும் எதைப் பேசக்கூடாது என்று கூட அறியாமல் இருப்பது வியப்பாக உள்ளது. திமுக சார்பில் மேடை போட்டு நீங்கள் யாரை வேண்டுமானாலும் திட்டுங்கள். அதற்கு நாங்களும் பதிலடி கொடுக்கிறோம். அதைவிடுத்து, ஒரு கட்சியின் உள் விவகாரங்களை பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் கிண்டலடித்துப் பேசத்தான் அரசு செலவில் மேடையமைத்துக் கொடுக்கிறார்களா? நீங்கள் இப்படி எங்களை சீண்டச் சீண்டத்தான் எங்கள் கட்சியினர் மனக்கசப்புகளை மறந்து உணர்வுபூர்வமாக ஒன்றுபட்டு வருகிறோம்” என்றார்.
தருமபுரி மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பிரகாஷ் நம்மிடம், “திமுக-வையும், அதன் தலைவர்களையும் பாமக-வினர் மேடை போட்டு தினம் தினம் கண்ணியமற்ற முறையில் விமர்சித்தால் அமைச்சர் எம்ஆர்கே ஏற்றுக்கொள்வாரா? ‘மக்களுக்காக பாமக என்னத்த கிழிச்சீங்க...’ என்றெல்லாம் அமைச்சர் பேசியிருப்பது அவரது பதவிக்கு அழகல்ல.
அதேபோல், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனம் ‘சுந்தரா டிராவல்ஸ்’ போல இருப்பதாக கிண்டலடிக்கிறார். தமிழகத்தில் ஓடும் நகரப் பேருந்துகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சுந்தரா டிராவல்ஸை விட மோசமான நிலையில் உள்ளன.
மக்களின் உயிருடன் விளையாடும் அந்த சுந்தரா டிராவல்ஸ்களை திமுக அரசு இயக்கிக் கொண்டிருப்பதை மறந்துவிட்டு அமைச்சர் இப்படிப் பேசியிருக்கிறார். அவர் பாமக-வை தொடர்ச்சியாக இப்படி கிண்டலடிப்பதால் பாமக இளைஞர்கள் திமுக-வுக்கு எதிராக ஒன்று திரண்டுகொண்டே இருக்கிறார்கள். இதன் மூலம், எம்ஆர்கே தன்னையும் அறியாமல் பாமக-வை வளர்த்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.
ஆக, சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் சுரேஷு என்ற கதையாக, உட்கட்சி குழப்பத்தால் சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கும் பாமக-வினரை தனது ‘பேச்சாற்றலால்’ உசுப்பிவிட்டுக் கொண்டே இருக்கிறார் அமைச்சர் எம்ஆர்கே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT