Published : 05 Aug 2025 05:34 AM
Last Updated : 05 Aug 2025 05:34 AM
திருநெல்வேலி: ‘தமிழகத்தில் திமுக ஆட்சியில் தற்போது என்ன நடக்கிறது என்பது முதல்வருக்கே தெரியாது’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். திருநெல்வேலி சந்திப்பில் விவசாயிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மனுக்களை அளித்தனர்.
அவற்றுக்குப் பதில் அளித்து பழனிசாமி பேசியதாவது:
குடிமராமத்து பணிகள்: அதிமுக ஆட்சியின்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏராளமான நீர் நிலைகளை தூர்வாரினோம். இதற்காக ரூ.1,240 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கால்வாய்களில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டன. ஆறுகளில் தடுப்பணைகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், இந்த ஆட்சியில் ரூ.2 ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் கட்டுவதாக அறிவித்தனர். ஆனால், ஒருசில இடங்களில் மட்டுமே அமைத்துவிட்டு திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். இந்தியாவிலேயே விவசாயிகளின் பயிர்க்கடன்களை ஐந்தாண்டில் இருமுறை தள்ளுபடி செய்தோம். வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு ரூ.2,448 கோடி வழங்கினோம்.
விவசாயிகள் அலைக்கழிப்பு: தற்போது, தொடக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்களை கேட்டு அவர்களை சிரமப்படுத்துகின்றனர். திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது. இதுகுறித்து தஞ்சாவூருக்கு வந்திருந்த பிரதமரிடம் பேசினேன். இப்போது கடன் பெறுவதற்கு ஆவணங்கள் தேவையில்லை என்று கூறுகிறார்கள்.
நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் இருப்பதால் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். அதிமுக ஆட்சியில் சிறு வணிகர்களுக்கு பாதுகாப்பு அளித்தோம். அதிமுக ஆட்சி சட்டத்தின் ஆட்சியாக இருந்தது.
அனைத்து துறைகளும் எனது கண்காணிப்பில் இருந்தன. இப்போது இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது முதல்வருக்கே தெரியாது. இவ்வாறு அவர் பேசினார். அதிமுக மாநகர் மாவட்ட செயலர் தச்சை கணேசராஜா வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT