Published : 02 Aug 2025 06:10 PM
Last Updated : 02 Aug 2025 06:10 PM

தமிழகத்தில் நாளை கோவை, நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஆக.3) முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 6 முதல் 8-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

4-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

5-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

6, 7 தேதிகளில் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புதுச்சேரி பாகூரில் 13 செமீ, கடலூர் மாவட்டம் வனமாதேவி, தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டு ஆகிய இடங்களில் தலா 11 செமீ, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் 10 செமீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, அரியாலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம், விழுப்புரம் மாவட்டம் கெடார் ஆகிய இடங்களில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x