Published : 01 Aug 2025 05:59 AM
Last Updated : 01 Aug 2025 05:59 AM
சென்னை: ‘தனியார் பேருந்து உரிமையாளர்களின் ஒற்றை கோரிக்கை காலம் கனியும்போது நிறைவேற்றப்படும்’ என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணிகள் வாகன கண்காட்சியை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, புதிய ரக தனியார் பேருந்துகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது: இந்தியாவிலேயே மோட்டார் வாகன உற்பத்தியில் முக்கிய இடத்தை தமிழகம் பெற்றிருக்கிறது. இன்றைய சூழலில் ஆம்னி பேருந்து தொழில் நடத்துவது சிரமமான காரியம் என்பதை நான் அறிவேன். இதனால், பல நேரங்களில் சங்கத்துக்கு உறுதுணையாக இருப்பதால் பலரால் விமர்சிக்கப்பட்டிருக்கிறேன்.
அரசு சார்பாக நடத்தும் போக்குவரத்துத் துறையைப்போல, தனியார் நடத்தும் ஆம்னி பேருந்து தொழிலும் சிறப்பாக இருக்க வேண்டும். இதை சொல்லும் நேரத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கையை நிறைவேற்றவில்லை என அவர்களுக்கு வருத்தம் இருக்கும்.
தற்போதைய அரசியல் சூழலில் அவர்களின் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற முடியாத சூழல் இருக்கிறது. காலம் கனிந்து வரும்போது அதுவும் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.அன்பழகன், செயலர் கே.திருஞானம், பொருளாளர் ஜே.தாஜுதீன், தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது பேருந்து உரிமையாளர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அதை மனதில் வைத்துதான் அமைச்சர் இவ்வாறு கூறினார் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT