Last Updated : 01 Aug, 2025 08:58 AM

8  

Published : 01 Aug 2025 08:58 AM
Last Updated : 01 Aug 2025 08:58 AM

‘பிளான் அப்ரூவல் வேணுமா... பிளாட்டை எழுதிக் கொடு!’ - வேலூர் மேயருக்கு எதிராக வெதும்பும் ரியல் எஸ்டேட் முதலாளிகள்

ப.கார்த்திகேயன் மற்றும் சுஜாதா

வீட்டு மனை பிரிவுக்கு அப்ரூவல் கேட்கும் ரியல் எஸ்டேட் காரர்களிடம் ‘கவனிக்கச்’ சொல்லி கை நீட்டுவது அரசியல் வாதிகளுக்கு பழகிப் போன சமாச்சாரம் தான். ஆனால், வேலூர் மேயர் தரப்பும் எம்எல்ஏ தரப்பும் பிளாட்களை குறைந்த விலைக்கு எழுதிக் கேட்பதாக அதிமுக-வினர் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் மனைப்பிரிவுக்கு ஒப்புதல் கேட்டு மாதக்கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் பலரும் காத்திருக்கின்றனர். மனைப் பிரிவுக்கு ஒப்புதல் தரவேண்டுமானால் இடத்தின் மதிப்புக்கு ஏற்ற விதத்தில் சம்திங் கொடுக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான விலையில் பிளாட்களை பத்திரம் பதிந்து கொடுக்க வேண்டும் என மாநகராட்சி தரப்பில் கண்டிஷன் போடுவதாலேயே இந்தத் தேக்க நிலை என்கிறார்கள்.

வேலூரைச் சேர்ந்த தொழில​திபர் தண்​ட​பாணி என்​பவர் மாநக​ராட்சி எல்​லைக்​குள் வசந்​த​புரம் பகு​தி​யில் உள்ள தனது பூர்விக சொத்​தான சுமார் 1.74 ஏக்​கர் நிலத்தை வீட்டு மனை​களாக பிரித்து கடந்த 2022-ல் லே அவுட் அப்​ரூவலுக்கு விண்​ணப்​பித்​துள்​ளார். அப்​ரூவல் வழங்​கு​வதற்​கான அரசின் அனைத்து வழி​காட்டு நெறி​முறைகளை​யும் பூர்த்தி செய்து ஆன்​லைனில் விண்​ணப்​பம் செய்​திருக்​கி​றார். ஆனாலும் அப்​ரூவல் கொடுக்​காமல் கிடப்​பில் வைத்​திருக்​கிறது மாநக​ராட்சி நிர்​வாகம்.

இதற்​கிடை​யில், வேலூர் எம்​எல்​ஏ-​வான ப.கார்த்​தி​கேயன் பேரைச் சொல்லி தண்​ட​பாணியை தொடர்பு கொண்​ட​வர்​கள், “லே அவுட் அப்​ரு​வல் தொடர்​பாக மேயர் தொடங்கி மாமன்ற உறுப்​பினர்​கள் வரைக்​கும் அத்​தனை பேரும் கேள்வி கேட்​பார்​கள். அவர்​களை சரிக்​கட்ட வேண்​டு​மா​னால் முதல் கட்​ட​மாக 25 லட்​சம் கொடுக்க வேண்​டும். அத்​துடன், நாங்​கள் கேட்​கும் 6 மனை​களை நாங்​கள் கேட்​கும் விலைக்கு நாங்​கள் சொல்​லும் நபர்​கள் பெயரில் கிரை​யம் செய்து கொடுக்க வேண்​டும்” என முதல் போட்​ட​வர்​களைப் போல் கேட்​டிருக்​கி​றார்​கள். இதைக் கேட்டு தண்​ட​பாணி அதிர்ந்து போயிருக்​கி​றார்.

இந்த டீலுக்கு ஆரம்​பத்​தில் சம்​ம​திக்க மறுத்த தண்​ட​பாணி, தனக்கு வேலை ஆகவேண்​டும் என்​ப​தற்​காக ரொக்​கத்தை குறைத்​துக் கொள்​ளும்​படி​யும், 6 மனை​களுக்​குப் பதிலாக 2 மனை​களை தரு​வ​தாக​வும் இறங்​கிப் போய் பேசி இருக்​கி​றார். ஆனால் கண்​டிஷன் போட்​ட​வர்​களோ, “நாங்​கள் கேட்​டதைத் தரு​வ​தாக இருந்​தால் பேச​வும். இல்​லா​விட்​டால் உங்​களால் முடிந்​ததைப் பார்க்​கலாம்” என விரைப்​பாகப் பேசி இருக்​கி​றார்​கள்.

ஆனால், அவர்​கள் இழுத்த இழு​வைக்கு தண்​ட​பாணி போகாத​தால் மூன்​றாண்​டு​கள் கடந்​தும் அவரது மனைப்​பிரி​வுக்கு அப்​ரூவல் கிடைக்​க​வில்​லை. உப்​புச் சப்​பில்​லாத காரணங்களைச் சொல்லி அவரது லே அவுட் அப்​ரூவல் மனுவை கிடப்​பில் வைத்​திருக்​கிறது மாநக​ராட்​சி.

இது ஒரு சாம்​பிள் மட்​டுமே எனச் சொல்​லும் வேலூர் பகுதி ரியல் எஸ்​டேட் முதலா​ளி​கள், “எம்​எல்ஏ தரப்​பின் யோசனையைக் கேட்டு இப்​படி பல லே அவுட்​களுக்கு அப்​ரூவல் கொடுக்​காமல் போட்டு வைத்​திருக்​கிறது மேயர் தரப்​பு” என்று ஆதங்​கப்​படு​கி​றார்​கள். இப்​படி​யான சூழலில் இந்த விவ​காரத்​தைக் கையில் எடுத்த அதி​முக அண்​மை​யில் வேலூரில் நடத்​திய ஆர்ப்​பாட்​டத்​தில், லே அவுட் அப்​ரூவலுக்கு யார் யாருக்கு என்​ன​வெல்​லாம் தரவேண்​டும் எனப் பட்​டியல் வாசித்து பகிரங்​கப்​படுத்​தி​யது. அடுத்ததாக, ரியல் எஸ்​டேட் முதலா​ளி​களும் போராட்டத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள்.

இது குறித்து விளக்​கமறிய வேலூர் எம்​எல்​ஏ-வான ப.கார்த்​தி​கேயனை நாம் தொடர்பு கொண்டபோது அவரது செல்​போனை எடுத்​துப் பேசிய அவரது உதவி​யாளர், “எம்​எல்ஏ முக்​கிய​மான மீட்​டிங்​கில் இருக்​கி​றார். வந்​ததும் விஷ​யத்​தைச் சொல்​கிறேன். இது விஷய​மாக அவரே உங்​களிடம் பேசு​வார்” என்று சொல்​லி​விட்டு இணைப்​பைத் துண்​டித்​தார். ஆனால், அதன் பிறகு எம்​எல்ஏ நம்மை அழைக்​கவே இல்​லை.

மேயர் சுஜாதா இது விஷய​மாக நம்​மிடம் பேசுகை​யில், “மனைப்​பிரி​வுக்கு ஒப்​புதல் கேட்​பவர்​கள் கழி​வுநீர் கால்​வாய் வசதி, சாலை, மின்​கம்​பம் அமைப்​ப​தற்​கான அனு​ம​தி, பாதாள சாக்​கடை திட்​டத்​துக்​கான அனு​மதி என அரசு கூறும் வழி​முறை​களை சரி​யாகப் பின்​பற்​று​வது இல்​லை. இதையெல்​லாம் முறை​யாக பின்​பற்றி மனு கொடுத்​தால் எவ்வித தாமத​மும் இன்றி லே அவுட் அப்​ரூவலை மாநக​ராட்சி நிர்​வாகம் நிச்​ச​யம் வழங்​கும்.

வசந்​த​புரம் பகு​தி​யில் லே அவுட் அப்​ரூவல் கேட்டு விண்​ணப்​பித்த தண்​ட​பாணி யாரென்றே எனக்கு தெரிய​வில்​லை. இருப்​பினும் அந்த இடத்தை நானே நேரில் சென்று ஆய்வு செய்​தேன். மனை​களை ஒட்டி கழி​வுநீர் கால்​வாய் செல்​வ​தால் அந்த இடத்​தில் சிறு​பாலம் அமைக்க வேண்​டும். மனை​களின் உயரத்தைக் காட்​டிலும் மழைநீர் கால்​வாய் உயர​மாக கட்​டப்​பட்​டுள்​ள​தால் பேஸ்​மென்ட்டை உயர்த்த வேண்​டும் எனக் கூறினோம்.

மனை வரைபடத்​தில் பாசனக் கால்​வாய் அகலம் குறிப்​பிடப்​ப​டா​மல் உள்​ளது. அதை​யும் சரி செய்ய அறி​வுறுத்​தினோம். மனைப்​பிரி​வில் போடப்​பட்​டுள்ள சாலை​கள் தரமற்​ற​தாக உள்​ளது. அதை​யும் சரி செய்​யச் சொன்​னோம்.

மனை​யில் ஒரு​புறம் மட்​டுமே மழைநீர் கால்​வாய் உள்​ளது. இப்​படி பல குறை​கள் இருப்​ப​தால் அனைத்​தை​யும் சரிசெய்​யுங்​கள் அப்​ரூவல் கிடைக்​கும் எனச் சொன்​னோம். ஆனால் அதையெல்​லாம் சரி செய்​யாத அவர், மாநக​ராட்சி மீது குற்​றம்​சாட்​டு​வது ஏற்​புடையதல்ல. அந்த மனைப்​பிரி​வுக்கு அப்​ரூவல் கொடுக்க கவுன்​சிலர்​களே எதிர்ப்பு தெரிவிக்​கும்​போது என்​னால் மட்​டும் என்ன செய்ய முடியும்?” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x