Published : 31 Jul 2025 04:58 PM
Last Updated : 31 Jul 2025 04:58 PM
சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் 6-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தமிழகத்தில் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை (ஆக.1) ஓரிரு இடங்களிலும், 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
தமிழகத்தில் ஆக.2-ம் தேதி, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
3-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும். 4-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.
5-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும். 6-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 4-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 3 செ.மீ, கிளன்மார்கன், தேவாலா, செருமுள்ளி, பார்வூட், ஊட்டி பிரையர் எஸ்டேட், சென்னை மேடவாக்கம், பள்ளிக்கரணை, கோவை மாவட்டம் சோலையார், சின்னக்கல்லார், சின்கோனா ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT