Published : 30 Jul 2025 05:33 PM
Last Updated : 30 Jul 2025 05:33 PM
சென்னை: தமிழகத்தில் ஆக.2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (ஜூலை 31) ஓரிரு இடங்களிலும், ஆக.1 முதல் ஆக.5-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.2-ம் தேதி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 3-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
4-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும், 5-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளை, அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஆக.3-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கிளன்மார்கன் ஆகிய இடங்களில் தலா 2 செமீ, செருமுள்ளி, மேல் கூடலூர், ஊட்டி பிரையர் எஸ்டேட், கூடலூர் சந்தை, பந்தலூர், பார்வூட், தேவாலா, விண்ட் வொர்த் எஸ்டேட், அவலாஞ்சி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT