Published : 30 Jul 2025 12:11 PM
Last Updated : 30 Jul 2025 12:11 PM
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்தார். இதில், தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: இதற்கு முன்னால் தமிழக அரசியலில் நடந்த மிகப்பெரிய இரண்டு தேர்தல்களைப் போல 2026 தேர்தலும் அமையப் போகிறது. அந்த இரண்டு மாபெரும் தேர்தல்களில் ஏற்கெனவே தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருந்த அதிகார பலம், அசுர பலம் அனைத்தையும் எதிர்த்து நின்றுதான் புதிதாக வந்தவர்கள் ஜெயித்தனர். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என்ற அனைத்து மக்களையும் சந்தித்தனர்.
அண்ணா சொன்ன அதே விஷயத்தை நானும் இங்கே சொல்ல விரும்புகிறேன். மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக் கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு. இதைச் சரியாக செய்தாலே போதும். அதனால்தான் இந்தச் செயலியை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதன் பிறகு மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என மக்களோடு மக்களாகத்தான் இருக்கப் போகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.” இவ்வாறு விஜய் பேசினார்.
முன்னதாக ’வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை வெளியிட்ட விஜய், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினருக்கு தவெக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT