Published : 28 Jul 2025 03:53 AM
Last Updated : 28 Jul 2025 03:53 AM
சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குஜராத் - வடக்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூலை 28) முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக் கூடும். ஆகஸ்ட் 1, 2-ம் தேதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 26 செ.மீ., நீலகிரி மாவட்டம் மேல் பவானி யில் 19 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 17 செ.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 16 செ.மீ., கோவை மாவட்டம் சின்கோனாவில் 8 செ.மீ.. உபாசி, வால்பாறை, சோலையாறு, நீலகிரி மாவட்டம் கிளன்மார்கனில் 7 செ.மீ.. நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை. எமரால்டு, மேல் கூடலூர், பார்வூட், செருமுள்ளி, தேவாலா, பந்தலூரில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT