Published : 26 Jul 2025 01:04 AM
Last Updated : 26 Jul 2025 01:04 AM

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோப்புப்படம்

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்து, மேற்குவங்க கடலோரப் பகுதியில் நிலவுகிறது. மகாராஷ்டிரா - கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இன்று (ஜூலை 26) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 10 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 9 செ.மீ., வால்பாறையில் 8 செ.மீ., சின்கோனா, உபாசி, நீலகிரி மாவட்டம் மேல்பவானி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்களில் 7 செ.மீ., கோவை மாவட்டம் சோலையாறில் 6 செ.மீ., தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர், திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, மாஞ்சோலை, நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x