Published : 24 Jul 2025 03:43 PM
Last Updated : 24 Jul 2025 03:43 PM

நீலகிரி, தேனி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நாளை நகரக்கூடும்.

மகாராஷ்டிரா - கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூலை 25) முதல் ஜூலை 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

நாளை நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 26-ம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களிலும், 27-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 10 செமீ, கோவை மாவட்டம் சின்கோனா, சோலையார், வால்பாறை ஆகிய இடங்களில் தலா 7 செமீ, கோவை மாவட்டம் உபாசி, நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 6 செமீ, தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது’ இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x