Published : 23 Jul 2025 06:14 PM
Last Updated : 23 Jul 2025 06:14 PM
சென்னை: நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஜூலை 24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக நாளை (ஜூலை 24) முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (ஜூலை 24) நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நாளை மறுநாள் இந்த 4 பகுதிகளுடன் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 27-ம் தேதி வரை மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணையில் 4 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, தேனி மாவட்டம் பெரியாறு, தேக்கடி, தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, கோவை மாவட்டம் ‘உபாசி’, சின்னக்கல்லாறு, வால்பாறை, சின்கோனா, நீலகிரி மாவட்டம் தேவாலா, விண்ட் வொர்த் எஸ்டேட், பந்தலூரில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT