Published : 23 Jul 2025 12:37 AM
Last Updated : 23 Jul 2025 12:37 AM
சென்னை: கோவை, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 24, 25-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய. லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 24, 25-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது அல்ல மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், மத்திய மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான், ஆந்திர கடலோரப் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடலின் சில பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு அரபிக்கடலின் பெரும்பாலான பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், மத்தியகிழக்கு அரபிக்கடலின் பெரும்பாலான பகுதிகள், கொங்கன் - கோவா - கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT