Last Updated : 22 Jul, 2025 08:25 AM

1  

Published : 22 Jul 2025 08:25 AM
Last Updated : 22 Jul 2025 08:25 AM

20 தொகுதிக்கு திட்டமிடும் திமுக... 15-க்கு பந்தி போடும் பாஜக! - களைகட்டும் புதுச்சேரி கூட்டணி அரசியல் களேபரங்கள்

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யார் மெஜாரிட்டியை கைப்பற்றுவது என்பதில் கூட்டணிகளுக்குள் மட்டுமல்லாது... கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்குள்ளேயே நீயா நானா யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.

2026 சட்​டமன்​றத் தேர்​தலில் போட்​டி​யிட திட்​ட​மிடும் புதுச்​சேரி​யின் முக்​கிய அரசி​யல் கட்சி தலை​வர்​கள், தங்​களது தொகு​தி​களை தாங்​களே தேர்வு செய்​து, மக்​களுக்​கான நல உதவி​களை தாராள​மாக வாரி வழங்க ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள். தங்​களுக்கு தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்​புக் கிடைக்​கு​மா... அப்​படியே கிடைத்​தா​லும் இந்​தத் தொகுதி கிடைக்​குமா என்​றெல்​லாம் தெரி​யாத நிலை​யிலும் சிலர் பெருத்த நம்​பிக்​கை​யுடன் தொகு​தி​களுக்​குள் வட்​டமடிக்க ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள். அதே​போல் இரண்டு முக்​கிய கூட்​ட​ணி​யிலும் உள்ள கட்​சிகளும் தங்​களுக்கு இத்​தனை தொகு​தி​கள் என கூட்​ட​ணிக்​குள்​ளேயே கொடிபிடிக்​கத் தொடங்​கி​விட்​டன.

கடந்த முறை என்​.ஆர்​.​காங்​கிரஸ் மற்​றும் பாஜக-வை உள்​ளடக்​கிய என்​டிஏ கூட்​டணி புதுச்​சேரி​யில் ஆட்​சி​யைப் பிடித்​தது. இருந்த போதும் 2024 மக்​கள​வைத் தேர்​தலில் இண்​டியா கூட்​ட​ணி​யின் காங்​கிரஸிடம் என்​டிஏ கூட்​டணி தோற்​றுப் போனது. இந்த நிலை​யில், இப்​போது புதுச்​சேரி​யில் இண்​டியா கூட்​ட​ணிக்கு தலைமை வகிப்​பது காங்​கிரஸா, திமுகவா என்​ப​தில் பெரும் போட்​டியே நடக்​கிறது. புதுச்​சேரி சட்​டப்​பேர​வை​யில் திமுக 6 எம்​எல்​ஏ-க்​களு​டன் எதிர்க்​கட்சி அந்​தஸ்​தில் உள்​ளது. காங்​கிரஸுக்கு 2 எம்​எல்​ஏ-க்​கள் மட்​டுமே இருக்​கி​றார்​கள். இதை மனதில் வைத்​து, தங்​கள் தலை​மை​யில் தான் கூட்​டணி அமைய வேண்​டும் என கணக்​குப் போடு​கிறது புதுச்​சேரி திமுக.

இதன் வெளிப்​பா​டாக, காங்​கிரஸும் திமுக-​வும் பரஸ்​பரம் வார்த்​தைகளால் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இப்​போது எதிர்க்​கட்சி அந்​தஸ்​தில் இருக்​கும் திமுக, கால் நூற்​றாண்​டு​களுக்​குப் பிறகு புதுச்​சேரி​யில் தனது தலை​மை​யில் ஆட்சி அமைய வேண்​டும் என ஆர்​வம் காட்​டு​கிறது. அதனால், தமி​ழ​கத்​தைப் போல புதுச்​சேரி​யிலும் தங்​கள் தலை​மை​யில் தான் கூட்​டணி என திமுக-​வினர் வெளிப்​படை​யாகவே பேசி வரு​கி​றார்​கள். அதே சம​யம், இழந்த பெரு​மையை இம்​முறை எப்​படியேனும் மீட்​டெடுக்க வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருக்​கிறது காங்​கிரஸ்.

இப்​படி ஒரே கூட்​ட​ணி​யில் இருக்​கும் இரண்டு முக்​கிய கட்​சிகளும் ஆளுக்​கொரு கணக்​குப் போடு​வ​தால் அவ்​வப்​போது வார்த்தை மோதலும் வெடித்து வரு​கிறது. “காங்​கிரஸ் ஒரு ஓடாத ஓட்டை வண்​டி” என திமுக மாநில அமைப்​பாள​ரும் எதிர்க்​கட்சி தலை​வ​ரு​மான சிவா கடுமை​யாக விமர்​சிக்க, இதற்கு எதிர்​வினை​யாற்​றிய காங்​கிரஸ், “ஓடாத வண்​டி​யில் ஏற வேண்​டாம், துணி​விருந்​தால் தனித்​துப் போட்​டி​யிடுங்​கள்” என்று பதிலடி கொடுத்​தது.

இதன் அடுத்த நகர்​வாக எதிர்க்​கட்​சித் தலை​வர் சிவா திமுக செயல்​வீரர்​கள் கூட்​டங்​களில், “2026 தேர்​தலில் இண்​டியா கூட்​ட​ணி​யில் 20 தொகு​தி​களை கேட்​டுப் பெற முடிவுசெய்​துள்​ளோம். கூட்​டணி கட்​சிகளுக்கு 10 தொகு​தி​களை ஒதுக்க உள்​ளோம்” எனப் பேசி வரு​கி​றார். இதனைத் தொடர்ந்து ராகுல், சோனி​யா, கார்கே உள்​ளிட்ட காங்​கிரஸ் தலை​வர்​களுக்கு கடிதங்​களை எழு​தித் தள்​ளிய காங்​கிரஸ்​காரர்​கள், ‘இண்​டியா கூட்​ட​ணி​யில் காங்​கிரஸுக்கு 20 தொகு​தி​களை பெற முடி​யா​விட்​டால் அனைத்து இடங்​களி​லும் நாம் தனித்தே போட்​டி​யிட வேண்​டும். அப்​படி போட்​டி​யிட்​டால் நிச்​ச​யம் 18 இடங்​களுக்கு மேல் வெல்​வோம்’ என்று தெரி​வித்​திருக்​கி​றார்​கள்.

இதுபற்றி நம்​மிடம் பேசிய முன்​னாள் முதல்​வர் நாராயண​சாமி, "தி​முக-​வின் நிலைப்​பாட்டை எதிர்க்​கட்​சித்​தலை​வர் சிவா தெரி​வித்​துள்​ளார். கூட்​ட​ணிக் கட்​சிகள் சில கருத்​துகளைச் சொல்​வார்​கள். அதனால் கூட்​ட​ணிக்​குள் கருத்து வேறு​பாடு ஏற்​பட்​டு​வி​டாது. எங்​களுக்கு எத்​தனை தொகுதி என்​பதை நாங்​கள் முடிவு செய்ய முடி​யாது. கட்சி தலைமை தான் முடிவு செய்​யும். அதே​போல் திமுக-வுக்கு எத்​தனை இடம் என்​பதை தமிழக முதல்​வர் ஸ்டா​லின் முடிவு செய்​வார்.

திமுக 20 தொகு​தி​களைக் கேட்​ப​தால் காங்​கிரஸிலும் 20 தொகு​தி​களைக் கேட்க வேண்​டும் என மேலிடத்​துக்கு கட்​சி​யினர் கடிதம் எழு​தி​யது ஏட்​டிக்​குப் போட்​டியல்ல. அவர்​கள் தங்​களது எண்​ணங்​களை கட்​சித் தலை​மைக்கு தெரி​வித்​துள்​ளனர். எங்​கள் கட்​சித்​தலைமை எத்​தனை தொகு​தி​களில் நிற்க வேண்​டும் என்று சொல்​கி​றார்​களோ அதில் நிற்​போம். தமி​ழ​கத்​தில் திமுக தலை​மை​யிலும் புதுச்​சேரி​யில் காங்​கிரஸ் தலை​மை​யிலும் ஆட்சி அமைப்​போம்" என்​றார்.

இண்​டியா கூட்​டணி களேபரங்​கள் இப்​படி இருக்க, என்​டிஏ கூட்​ட​ணி​யிலும் ஏகத்​துக்கு களேபரம் தான். இந்​தக் கூட்​ட​ணி​யில் இடம் பெற்​றுள்ள பாஜக 15 தொகு​தி​களில் போட்​டி​யிடு​வோம் என்​கிறது. பாஜக மேலிடப் பொறுப்​பாளர் நிர்​மல்​கு​மார் சுரானா தொண்​டர்​களிடம் பேசுகை​யில், "கடந்த முறை பாஜக 9 இடங்​களில் போட்​டி​யிட்டு 6 இடங்​களை வென்​றது. இந்த முறை 12 சீட்டோ அல்​லது 15 சீட்டோ எது​வாக இருந்​தா​லும் 100 சதவீத வெற்​றியைப் பெறு​வோம்" என்று சொன்​னது என்​.ஆர்​.​காங்​கிரஸ் தரப்​பில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதுபற்றி பாஜக அமைச்​சர் நமச்​சி​வா​யத்​திடம் கேட்​டதற்​கு, “எந்த ஒரு கட்​சிக்​கும் தங்​களுக்கு இத்​தனை தொகு​தி​கள் வேண்​டும் என்று கேட்க அதி​காரம் உண்​டு. ஆனால், இறுதி முடிவை கூட்​டணி கட்சி தலை​வர்​கள் சுமுக​மாக பேசி முடிப்​பார்​கள்" என்று மைய​மாகச் சொன்​னார். தேர்​தல் நெருங்க நெருங்க புதுச்​சேரி​யில் கூட்​டணி கட்​சிகளுக்​குள் இன்​னும் ரக ரகமாய் குஸ்​திகள் அரங்​கேறலாம். அதற்​கான அறிகுறிகள் இப்​போதே தெரிய ஆரம்​பித்​துவிட்​டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x