Published : 22 Jul 2025 08:52 AM
Last Updated : 22 Jul 2025 08:52 AM
தமிழகத்தில் தாமரை மலரவே, மலராது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் முழங்கிக் கொண்டிருந்த சமயத்தில், பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தின் மொடக்குறிச்சி தொகுதியில் 2021-ல் தாமரையை மலரவைத்து தனது செல்வாக்கைக் காட்டியது பாஜக. அப்போது இந்தத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணைப் பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பாஜக புதுமுகமான டாக்டர் சரஸ்வதி தோற்கடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்போது பாஜக-விடம் இருந்து இந்தத் தொகுதியைக் கைப்பற்ற காங்கிரஸ் ஆளுக்கு முந்தி களமிறங்கி இருக்கிறது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தானே நேரடியாக போட்டியிட்டு அந்தத் தொகுதியை காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றியது திமுக. இனி ஈரோடு கிழக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், ஏற்கெனவே தாங்கள் வென்ற மொடக்குறிச்சி தொகுதிக்காக இப்போது ‘உரிமைக்குரல்’ எழுப்பத் தொடங்கி விட்டது காங்கிரஸ்.
அண்மையில் நடைபெற்ற ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், இதற்காக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அடுத்தகட்டமாக தங்களின் விருப்பத்தை மாநிலத் தலைமைக்கும் மத்திய தலைமைக்கும் கொண்டு செல்லத் தயாராகி வருகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், “ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்குப் பிறகு, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று, தொகுதியை திமுக-வுக்கு விட்டுக் கொடுத்தோம்.
தற்போது, மீண்டும் ஈரோடு கிழக்கை நாங்கள் கேட்டுப் பெற முடியாத சூழலில், ஏற்கெனவே 2006-ல் காங்கிரஸ் வென்ற மொடக்குறிச்சி தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். இதை மனதில் வைத்து மொடக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 1450 கமிட்டிகளை அமைத்து கட்சியை பலப்படுத்தி உள்ளோம். இம்முறை மொடக்குறிச்சியை எப்படியாவது காங்கிரஸுக்கு கேட்டுப்பெற வேண்டும் என்பதில் கட்சி நிர்வாகிகள் உறுதியாக இருக்கிறார்கள்” என்றார்.
மொடக்குறிச்சி தொகுதியில் 6 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட மக்கள் ராஜன், சமீபத்தில் செல்வபெருந்தகையை அழைத்து வந்து பொதுக்கூட்டமும் நடத்தியுள்ளார். ராஜன் மட்டுமல்லாது முன்னாள் எம்எல்ஏ-வான ஆர்.எம்.பழனிசாமியும் இந்தத் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அதிமுக கூட்டணியில் இம்முறையும் தொகுதி தங்களுக்கே என தீர்க்கமாக இருக்கும் பாஜக, சிட்டிங் எம்எல்ஏ-வான சரஸ்வதிக்குப் பதிலாக அவரது மருமகள் கிருத்திகா ஷிவ்குமாரை நிறுத்தும் யோசனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தத் திட்டத்துடன் தனது ‘அறம் அறக்கட்டளை’ மூலமாக தொகுதிக்குள் மலிவு விலை உணவகம், மலிவு விலை மருத்துவம் போன்றவற்றை செயல்படுத்தி வருகிறார் கிருத்திகா.
இது தங்களுக்கு சாதகமான தொகுதி என்பதால் அதிமுக தரப்பிலும் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்பி-யான செல்வகுமார சின்னையன், முன்னாள் எம்எல்ஏ-வான சிவசுப்பிரமணியன் ஆகியோரும் அதிமுக தலைமையிடம் தொகுதிக்காக லாபி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதேபோல் திமுக மறுபடியும் இங்கு போட்டியிடலாம் என்ற நினைப்பில், நெசவாளர் அணியைச் சேர்ந்த எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன் ஆகியோரும் எம்எல்ஏ கனவில் இருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவில், நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பிறகு வாபஸ் பெறப்பட்ட கொமதேக இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தியும் மொடக்குறிச்சி கனவில் இருக்கிறார்.
இத்தனை பேர் மொடக்குறிச்சிக்காக மோதினாலும் அதிமுக கூட்டணியில் பாஜக-வும் திமுக கூட்டணியில் காங்கிரஸும் இந்தத் தொகுதிக்காக செய்துவரும் களப்பணிகள் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT