Published : 21 Jul 2025 05:51 AM
Last Updated : 21 Jul 2025 05:51 AM
சென்னை:தமிழகத்தில் குற்றங்களை தான் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால், பெருகி வரும் குப்பையை கூடவா தடுக்க இயலாது என தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்: மத்திய அரசால் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவிலான நகரங்களின் தரவரிசையில் சென்னை 38-வது இடத்தையும், மதுரை 40-வது இடத்தையும் பெற்றிருப்பது மிகுந்த கவலையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. தமிழகத்தின் ஒரு நகரம் கூட தூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை.
இந்நிலையில், ஆண்டுதோறும் தூய்மைப் பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவிடுவதாக திராவிட மாடல் அரசு காட்டிய கணக்குகள் எல்லாம் என்ன ஆனது. பெருகி வரும் குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகி வரும் குப்பையை கூடவா தடுக்க இயலாது? திராவிட மாடல் அரசின் திறனற்ற நிர்வாகத்தால் நோய்களின் தொட்டிலாக தமிழகம் மாறிவருவது மிகக் கொடுமையானது.
ஓ.பன்னீர் செல்வம்: தமிழகத்தில் தூய்மைப் பணி மோசமான நிலையில் உள்ளது. மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி தமிழக நகரங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. மழைநீர் வடிகால் பணி, பாதாள சாக்கடை பணி, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி போன்றவற்றை விரைந்து முடிக்காத திமுக அரசின் செயலற்ற தன்மைக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின் கள நிலையை ஆராய்ந்து, தமிழகத்தை தூய்மையாக வைத்திருக்கவும் சாலைகளை விரைந்து அமைக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT