Published : 21 Jul 2025 04:52 AM
Last Updated : 21 Jul 2025 04:52 AM
சென்னை: மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய ஜூலை 25, 26-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் திருமணத்தை பதிவு செய்ய, பத்திர பதிவுத் துறையால் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 2018 டிசம்பர் 10-ம் தேதி முதல், திருமண தரப்பினர் இணைய வழியில் விண்ணப்பித்து, திருமண பதிவுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய, சிறப்பு முகாம் நடத்துமாறு பத்திர பதிவுத் துறைக்கு அயலக தமிழர் நலன், மறுவாழ்வு துறை ஆணையர் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். இதை கருத்தில் கொண்டு, சிறப்பு முகாம்கள் நடத்த பத்திர பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, சனிக்கிழமை வேலை நாளாக உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ஜூலை 26-ம் தேதியும் (சனிக்கிழமை), அன்று செயல்படாத சார்பதிவாளர் அலுவலகங்களில் ஜூலை 25-ம் தேதியும் (வெள்ளிக்கிழமை) திருமணங்களை பதிவு செய்ய, சிறப்பு முகாம்கள் நடத்துமாறு பதிவு அலுவலர்களுக்கு பதிவுத் துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
திருமண பதிவுக்காக காத்திருக்கும் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT