Published : 19 Jul 2025 12:49 PM
Last Updated : 19 Jul 2025 12:49 PM

கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழக அரசு விழாவுக்கு கோயில் வளாகத்துக்குள் அனுமதி இல்லை: பிரதமர் பங்கேற்பதால் நடவடிக்கை

கும்பகோணம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற உள்ள ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால், தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவுக்கு கோயிலுக்குள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழன் பிறந்த ஜென்ம நட்சத்திரமான ஆடி திருவாதிரை நாள், 2022-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டு ஆடிதிருவாதிரை விழாவை கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வளாகத்தில் ஜூலை 23-ம் தேதி கொண்டாட அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை நிகழாண்டு இந்திய கலாச்சார துறை சார்பில் ஜூலை 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 5 நாள் விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 27-ம் தேதி நடைபெறும் திருவாசகம் மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தமிழக அரசு சார்பில் 23-ம் தேதி நடைபெறும் விழாவை கோயிலுக்குள் நடத்த தொல்லியல் துறை அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முதலாம் ராஜேந்திரன் சோழன் ஜென்ம நட்சத்திர விழா குழுவினர் கூறியது: கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற உள்ள ஆடி திருவாதிரை விழாவில் 27-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், ஒரு வாரத்துக்கு முன்பே கோயில் வளாகம் முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.

எனவே, தமிழக அரசு சார்பில் 23-ம் தேதி நடைபெறும் விழாவை கோயில் வளாகத்தில் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாக அருகில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் விழா நடைபெற உள்ளது என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x