Published : 16 Jul 2025 05:37 AM
Last Updated : 16 Jul 2025 05:37 AM
சென்னை: மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என தமிழக டிஜிபி-க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சிக்கான போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளாத சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் எஸ்.கே.சாமி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்திருந்தார்.
புகார் மனுவை விசாரித்த ஆணையம், தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வரும் 6 வாரங்களுக்குள் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் மனித உரிமை ஆணைய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும்” என குறிப்பிட்டு டிஜிபி-க்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT