Published : 16 Jul 2025 06:16 AM
Last Updated : 16 Jul 2025 06:16 AM
சிவகங்கை: போலீஸார் மற்றும் திமுகவினர் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (29) போலீஸார் தாக்கியதில் கொல்லப்பட்டார். இதனிடையே போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அஜித்குமார் குடும்பத்தினரை மிரட்டி பேரம் பேசியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஏற்கெனவே அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார், மடப்புரத்தில் தனியார் மண்டபங்களில் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் தனித்தனியாக திமுகவினர் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரை துன்புறுத்தி பேரம் பேசினர். அதனை சிலர் வீடியோவும் எடுத்துள்ளனர். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் அஜித்குமார் குடும்பத்தினரிடம் போலீஸார், அரசியல்வாதிகள் பேச்சு வார்த்தை நடத்தியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி யுள்ளது. அதில் போலீஸார், திமுக முக்கிய நிர்வாகி உள்ளிட்ட சிலர், மடப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அஜித்குமார் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசுகின்றனர். இதையறிந்த அஜித்குமாரின் நண்பர்கள், பூட்டியிருந்த மண்டபத்தை திறக்க வலியுறுத்தி சத்தமிட்டு, கதவுகளை தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
5 காவலர்களுக்கு காவல் நீட்டிப்பு: இதற்கிடையே அஜித்குமார் கொலை வழக்கில் கைதான 5 காவலர்களுக்கு ஜூலை 29-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை வாகன ஓட்டுநர் ராமச்சந்திரனை தவிர்த்து காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ்பிரசாத் உத்தரவிட்டிருந்தார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர்களது நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது.இதையடுத்து, காணொலி மூலம் 5 காவலர்களின் நீதிமன்றக் காவலை ஜூலை 29 வரை நீட்டித்து குற்றவியல் நடுவர் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT