Published : 16 Jul 2025 05:09 AM
Last Updated : 16 Jul 2025 05:09 AM
சென்னை: நகை திருட்டு, தீண்டாமை வன்கொடுமை மற்றும் ரியல் எஸ்டேட் வழக்குகளில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்யவும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஜரினா பேகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “92 பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக கடந்த 2018 செப்.4-ல் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சூளைமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்தும் கடந்த 7 ஆண்டுகளாக நகைகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2018 முதல் தற்போது வரை சூளைமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளர்களாக பணியாற்றிய அனைவரும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அதையடுத்து நீதிபதி, “இதுபோன்ற குற்ற வழக்குகளில் எப்படி விரைவாக துப்பு துலக்குவது என்பது குறித்த பயிற்சியை தமிழக அரசு காவல் துறையினருக்கு வழங்க வேண்டும். இந்த வழக்கில் கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என எச்சரித்தார்.
பின்னர் சூளைமேடு காவல் நிலையத்தில் நீண்டகாலம் ஆய்வாளராக பணியாற்றி தற்போது ரயில்வே போலீஸ் உதவி ஆணையராக உள்ள கர்ணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்யவும், கடந்த 2018 முதல் தற்போது வரை சூளைமேட்டில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல கடந்த 2018-ம் ஆண்டு சேலம் மாவட்டம் வீராணம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தவணை முறையில் வீட்டுமனை வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத வழக்கில் சம்பந்தப்பட்ட வீராணம் காவல் ஆய்வாளர்களும் ஆஜராகியிருந்தனர். அவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் நிலம் தொடர்பாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த செந்தாமரை என்பவருக்கும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவருக்கும் இடையிலான பிரச்சினையில், தீண்டாமை வன்கொடுமை வழக்குப் பதியாமல் ஒருதலைபட்சமாக செயல்பட்ட கோட்டக்குப்பம் டிஎஸ்பியாக பணிபுரிந்த, தற்போது தேனி மாவட்டம் போடி டிஎஸ்பியாக உள்ள சுனிலை இடைநீக்கம் செய்யவும் டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT