Published : 15 Jul 2025 05:20 AM
Last Updated : 15 Jul 2025 05:20 AM

7-வது நாளாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: பணி நிரந்​தரம் கோரி 7-வது நாளாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்​கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் டிபிஐ வளாகம் அருகே போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது.

அரசுப் பள்​ளி​களில் 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்​கள் கடந்த 2012-ம் ஆண்​டு​முதல் பணி​யாற்றி வரு​கின்​றனர். வாரத்​தில் 3 நாட்​கள் பணிபுரி​யும் அவர்​களுக்கு தொகுப்​பூ​தி​ய​மாக மாதம் ரூ.12,500 வழங்​கப்​படு​கிறது.

அவர்​கள் தங்​களை பணிநிரந்​தரம் செய்​யக் கோரி பல ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர். திமுக ஆட்​சிக்கு வந்​தால் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​கள் பணிநிரந்​தரம் செய்​யப்​படு​வர் எனத் தேர்​தல் வாக்​குறுதி அளிக்​கப்​பட்​டிருந்​தது.

அந்த வகை​யில், திமுக 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்​பேற்​றது முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்​கள் தங்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்தி வரு​கின்​றனர். தங்​கள் கோரிக்​கையை வலி​யுறுத்தி பல்​வேறு வடிவங்​களில் அடிக்​கடி போராட்​டத்​தி​லும் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், பகு​திநேர சிறப்பு ஆசிரியர் சங்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக் குழு சார்​பில் கால​வரையற்ற போராட்​டம் நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகம் அருகே கடந்த 8-ம் தேதி தொடங்​கியது. இப்​போ​ராட்​டம் 7-வது நாளாக நேற்​றும் நீடித்​தது. ஆசிரியர்​கள் டிபிஐ வளாகத்தை எந்​நேர​மும் முற்​றுகை​யிடலாம் எனக்​கருதி டிபிஐ வளாகத்​தின் அனைத்து நுழைவு வாயில்​களி​லும் போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

இந்த சூழலில், நேற்று மதி​யம் 12 மணி​யள​வில், டிபிஐ வளாகம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகே போராட்​டத்​தில் ஈடு​பட்ட பகு​திநேர ஆசிரியர்​கள் திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​டனர். யாரும் எதிர்​பா​ராத நேரத்​தில் திடீரென அவர்​கள் கூட்​ட​மாக சாலை​யில் அமர்ந்து மறியலில் ஈடு​பட்​டனர்.

அங்கு பாது​காப்​புப் பணியி​லிருந்த போலீ​ஸார் உடனடி​யாக அவர்​களை அப்​புறப்​படுத்த முயன்​றனர். ஆனால், ஆசிரியர்​கள் தரை​யில் அமர்ந்து கொண்​டும், படுத்​துக்​கொண்​டும் கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி கோஷம் எழுப்​பியபடி இருந்​தனர். இதனால், அப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது.

பின்​னர், சாலை மறியலில் ஈடு​பட்ட ஆசிரியர்​களை போலீ​ஸார் வலுக்​கட்​டாய​மாக தூக்​கிச்​சென்று அருகே நிறுத்​தப்​பட்ட போலீஸ் வாக​னங்​களில் ஏற்​றினர். அதன்​பிறகு அப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து சீரானது. சாலை மறியலில் ஈடு​பட்டு கைது செய்​யப்​பட்ட ஆசிரியர்​கள் அனை​வரும் மாலை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். தங்​கள் கோரிக்கை நிறைவேறும் வரை போ​ராட்​டத்​தை தொடரப்​போவ​தாக ஆசிரியர்​கள்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x