Published : 14 Jul 2025 12:26 AM
Last Updated : 14 Jul 2025 12:26 AM
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 விசைப்படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்றனர். ஈசாக் என்பவரது விசைப்படகில் சென்ற ரூதர், சண்முகம், எடிசன், சக்திவேல், ஜெகதீஷ், டல்வின் ராஜ், அன்பழகன் ஆகிய 7 மீனவர்கள், நெடுந்தீவு அருகே பாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி, ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தனர். அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். 7 பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், ஊர்காவல்துறை நீதிபதி உத்தரவின்பேரில் யாழ்ப்பாணம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
அதேபோல, கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே மரியசீரோன் என்பவரது விசைப்படகை சிறைபிடிக்க இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு வேகமாக வந்தது. அந்த படகு மோதியதில் விசைப்படகின் பின்பகுதி சேதமடைந்தது. படகில் இருந்த 7 மீனவர்களும் வேகமாக படகை இயக்கி ராமேசுவரம் வந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT