Published : 11 Jul 2025 06:04 AM
Last Updated : 11 Jul 2025 06:04 AM
சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருடைய சொத்து விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது, மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, தேவநாதன் யாதவ் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ. 680 கோடிக்கும் மேல் வசூலித்து மோசடி செய்துள்ளதாகவும், சென்னையில் அண்ணா சாலை, மயிலாப்பூர், அண்ணாநகர் மட்டுமின்றி ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்றும், அதற்கான ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே, முதலீட்டாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை திருப்பி கொடுக்கும் வரை ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகியுள்ள தேவநாதன் யாதவின் சொத்து விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17-க்கு தள்ளி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT