Published : 11 Jul 2025 10:21 AM
Last Updated : 11 Jul 2025 10:21 AM
தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு எதிராக சொந்தக் கட்சியினர் எழுப்பி வந்த சங்கநாதம் சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில் அடுத்த ரோதனையாக, பன்னீர்செல்வம் வேடிக்கையாக பேசிய பேச்சு தருமபுரி மாவட்ட பாமக-வினரை அவருக்கு எதிராக தகிக்க வைத்திருக்கிறது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின் கீழ் தருமபுரியில் 8 கிலோ மீட்டர் தூர நடைபயிற்சிக்கான பாதையை அமைத்துத் தந்துள்ளார்.
மேடையில் அமர்ந்திருக்கிற தருமபுரி பாமக எம்எல்ஏ-வான வெங்கடேஷ்வரன் கூட அந்தப் பாதையில் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். ‘நடக்கிற கால்கள் சீதேவி, நடக்காத கால்கள் மூதேவி’ என்று பழமொழி கூறுவார்கள். அதைப்போல, வெங்கடேஷ்வரன் தினமும் நடந்து சீதேவி ஆக ட்ரை பண்ணுகிறார். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பார்கள். இப்போ ரெண்டு மாங்கா...” என்று கூறி பேச்சை நிறுத்திவிட்டு மேடையில் அமர்ந்திருந்த பாமக எம்எல்ஏ-க்களான ஜி.கே.மணி, வெங்கடேஷ்வரன் ஆகியோரை திரும்பிப் பார்த்து குலுங்கிச் சிரித்தார். அமைச்சர் பேச்சின் அர்த்தத்தை புரிந்துகொண்டு அரங்கில் இருந்த பலரும் சிரித்தனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட பன்னீர், “எங்கள் திட்டத்தை பயன்படுத்தி எம்எல்ஏ மக்களையும் சந்திக்கிறார், நடைபயிற்சியால் தன் உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறார் என்பதைத் தான் அப்படிக் கூறினேன்” என்று பேச்சை மாற்றினார். பாமக-வை பகடி செய்த அமைச்சரின் இந்தப் பேச்சானது தருமபுரி மாவட்ட பாமக-வினரை உசுப்பேற்றி விட்டுள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய பாமக முன்னாள் எம்எல்ஏ-வான வேலுச்சாமி, “அமைச்சர் எம்ஆர்கே-யின் இந்தப் பேச்சு பாமக-வினர் அனைவருக்கும் மிகுந்த வலியைத் தந்திருக்கிறது. பாமக-வில் நிலவும் பிரச்சினையின் பின்னணியில் திமுக இருக்கிறது என்பதை தொடக்கம் முதலே கூறி வருகிறோம்.
மக்கள் விரோத, அலங்கோல ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை, அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்றாதது போன்ற காரணங்களால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், திமுக தனது பண பலத்தை பயன்படுத்தி தனது கூட்டணிக் கட்சிகளை பலப்படுத்துவது, எதிரணியில் வலுவான கூட்டணி சேர்ந்து விடாதபடி உடைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
அந்த வரிசையில் பாமக-வை உடைத்து கட்சியின் வலிமையை குறைக்கும் வேலையை திமுக தலைமை தொடங்கி அமைச்சர்கள் வரைக்கும் செய்து வருகின்றனர். ஆனால், ‘இப்போ ரெண்டு மாங்கா’ என்று எந்த மண்ணில் நின்று அமைச்சர் எம்ஆர்கே கிண்டல் செய்தாரோ அந்த மண்ணில் உள்ள 5 தொகுதிகளில் ஒன்றில் கூட வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றிபெற விடமாட்டோம். வட தமிழகம் முழுக்க திமுக படுதோல்வியை சந்திக்கும். பாமக-வை பிளவுபடுத்தி வெற்றி பெறலாம் என்ற திமுக-வின் எண்ணம் ஈடேறாது” என்றார்.
இதே கருத்தை வலியுறுத்திப் பேசிய தருமபுரி மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பிரகாஷ், “எந்த அடிப்படையில் அமைச்சர் எம்ஆர்கே ‘ரெண்டு மாங்கா’ எனக் கூறுகிறார்? திமுக-வினர் இதுபோல எங்களை சீண்டும்போதுதான் பாட்டாளிச் சொந்தங்களின் தேர்தல் பணி 3 மடங்கு வேகமெடுக்கும்.
இனி தருமபுரி மாவட்டத்தில் திமுக-வுக்கு சட்டமன்ற உறுப்பினர்களே கிடைக்காதபடி அதி தீவிரமாக பணியாற்றுவோம். தருமபுரியில் திமுக-வை ஒரு இடத்தில் கூட பாமக வெற்றிபெற விடாது” என்றார்.அவசரப்பட்டு அப்படி எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு கிளம்பி விடாதீர்கள் பாட்டாளிகளே... எனென்றால் உங்களது மருத்துவர் அய்யா திமுக சைடிலும் கூட்டணிக்கு துண்டு போட்டு வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT