Published : 10 Jul 2025 03:14 PM
Last Updated : 10 Jul 2025 03:14 PM

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில், அமைந்துள்ள தனியார் பள்ளியை (புனித ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி) அப்புறப்படுத்தக் கோரி பாஜகவின் ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகேந்திரன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளியை அப்புறப்படுத்தி, கோயில் நிலத்தை கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும், பள்ளிக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் எனவும் கடந்த 2024-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்ன்துறை செயலாளர் மதுமதி, இந்து சமய அறநிலைய துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக வினோத் ராகவேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி, இந்து சமய அறநிலைய துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்கள் தரப்பில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், புவனகிரி தாலுகா பெரியப்பட்டு கிராமத்தில் பள்ளிக்கு 4.73 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

32 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அந்த இடத்தில் சாலை வசதி ஏதுமில்லை என்று பள்ளித்தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடலூர் நகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் நிலம் ஒதுக்கி தர வேண்டுமென பள்ளி நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், பிரதான சாலையிலிருந்து குறிப்பிட்ட அந்த நிலத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதையடுத்து, பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்கக்கோரி அரசுக்கு விண்ணப்பிக்கும் படி பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதனை பரிசீலிக்கும்படி வருவாய்த்துறை செயலாளர் உத்தரவிட்டு, அதிகாரிகளின் மன்னிப்பை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x