Published : 09 Jul 2025 03:45 PM
Last Updated : 09 Jul 2025 03:45 PM
சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 9) முதல் 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 11 முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 13-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை மணலி புதுநகர், கத்திவாக்கம், சென்னை சென்ட்ரல், அண்ணாநகர் மேற்கு, ஐஸ் ஹவுஸ், அமைந்தக்கரை, நுங்கம்பாக்கம், அயப்பாக்கம், எண்ணூர், அயனாவரம், ஆட்சியர் அலுவலகம், ராஜா அண்ணாமலைபுரம், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், தாமரைப்பாக்கம், பொன்னேரி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம், திருப்போரூர், கேளம்பாக்கம், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT