Published : 09 Jul 2025 12:02 PM
Last Updated : 09 Jul 2025 12:02 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே செல்லும்போது வந்தேபாரத் ரயிலில் திடீர் புகை கிளம்பியதால், அந்த ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து இன்று காலை 6.15 மணிக்கு சென்னையை நோக்கி வந்தேபாரத் ரயில் புறப்பட்டது. காலை 8.45 மணிக்கு திண்டுக்கல் ரயில்நிலையத்தை கடந்து சென்றது. சில கிலோமீட்டர் கடந்த நிலையில் வடமதுரை ரயில்நிலையத்திற்கு முன்பாக வேல்வார்கோட்டை கிராமப்பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது இன்ஜினை அடுத்துள்ள பெட்டியில் இருந்து புகை கிளம்பியது. பெட்டி முழுவதும் புகை பரவத்துவங்கிய நிலையில், அங்கிருந்த பயணிகள் அலறியடித்து கூச்சல் இட்டனர். இதைகேட்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார்.
ஆராய்ந்தபோது ரயிலில் இருந்த ஏசி யூனிட்ல் இருந்து புகை கிளம்பியது தெரியவந்தது. இதையடுத்து புகை வந்த பகுதியை ரயில் ஓட்டுநர்கள் தற்காலிகமாக சரிசெய்தனர். மேலும், அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அருகிலுள் பெட்டிக்கு மாற்றப்பட்டனர். இதனால் 20 நிமிடங்கள் அந்த ரயில் வேல்வார்கோட்டை பகுதியில் நின்றது. இதுகுறித்து திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
புகை வருவது நின்றதையடுத்து வந்தேபாரத் ரயில் 20 நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து மெதுவான வேகத்தில் திருச்சி நோக்கி புறப்பட்டுச்சென்றது. திருச்சி ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வுக்கு பிறகு, அவர்களின் ஒப்புதலின் பேரில் தொடர்ந்து வந்தேபாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT