Published : 09 Jul 2025 06:14 AM
Last Updated : 09 Jul 2025 06:14 AM
சென்னை: பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி, தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவார்கள். அதற்கு ரூ.12,500 மாத சம்பளமாக தரப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.
அந்த கோரிக்கையை நிறை வேற்ற வலியுறுத்தி சிறைநிரப்பும் போராட்டம் ஜூலை 8-ம் தேதி நடத்தப்படும் என்று பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் அறிவித்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகிகளை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர்.
அதையும் மீறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரர் அரசு பல்நோக்கு மருத்துவனை அருகே கூடினர். அப்போது அங்கு வந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். மேலும், சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக போராட்டத்துக்கு வந்த ஆசிரியர்களும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, “பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக போராட்டத்தை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு முறையும் செய்து தருவதாக அமைச்சர் மகேஸ் உறுதியளிக்கிறார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. தமிழக அரசு பகுதிநேர ஆசிரியர்களை தொடர்ந்து வஞ்சிக்கிறது’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT