Published : 09 Jul 2025 05:29 AM
Last Updated : 09 Jul 2025 05:29 AM
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் இருமுனை போட்டி தான் நிலவும் என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளை சமூக விடுதிகள் என அறிவித்தமைக்காக சென்னை, திமுக தலைமையகத்தில் முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: பெரியார் வழியில் படிப்படியாக சாதிமத அடையாளங்களை துடைத்தெறியும் வகையில் செயல்படும் முதல்வருக்கு பாராட்டை தெரிவித்தோம். மேலும், தேர்ச்சி பெற்ற 5,493 பேருக்கு கேங்மேன் பணி வழங்க வேண்டும். அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கணினி பயிற்றுநர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினோம்.
பாஜகவோடு எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னார். ஆனால், இப்போது கூட்டணி வைத்துள்ள அதிமுகவினர் ஜெயலலிதாவின் வாரிசுகளா அல்லது மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வழித்தோன்றல்களா என தெரியவில்லை. கூட்டணிக்கு தலைமை அதிமுகவா பாஜகவா என தெரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி என்றால் பாஜக தலைமை தாங்குகிறது என்று தானே பொருள்.
தமிழகத்தை பொருத்தவரை இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாகவே இருக்கிறோம். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு என்ன பெயர். முதல்வரை மோடி தீர்மானிப்பார் என்பதால் அதிமுகவின் நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. வரும் தேர்தலைப் பொருத்தவரை இருமுனை போட்டி தான். திமுக, அதிமுக ஆகிய அணிகளை தான் மக்கள் சீர்தூக்கி பார்ப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT