Published : 08 Jul 2025 05:55 AM
Last Updated : 08 Jul 2025 05:55 AM
சென்னை: சென்னை - கூடூர் மார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி - பொன்னேரி இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 23 மின்சார ரயில்களின் சேவையில் இன்றும், நாளை மறுதினமும் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு இன்றும் (8-ம் தேதி), நாளை மறுதினமும் (10-ம் தேதி) காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு அதே நாட்களில் அதிகாலை 5.40, 8.35, 10.15, நண்பகல் 12.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு காலை 10, பகல் 11.45, 12.35, மதியம் 1.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு அதே நாட்களில் காலை 9.40, நண்பகல் 12.40 மற்றும் சூலூர்பேட்டை - நெல்லூருக்கு காலை 7.50 மணி, நெல்லூர் - சூலூர்பேட்டைக்கு இரவு 9 மணி, கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரைக்கு காலை 10.55 மணி, கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.10, 9.55, பகல் 11.25, நண்பகல் 12, மதியம் 1, பிற்பகல் 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
பகுதி ரத்து: செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டிக்கு 8, 10 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. கும்மிடிப்பூண்டி - தாம்பரத்துக்கு அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு பதிலாக, அதே நாட்களில், சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, எண்ணூர் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, சென்னை கடற்கரை -மீஞ்சூர் இடையே ஒரு பயணிகள் சிறப்பு ரயிலும் இயக்கப்படும். சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT