Published : 08 Jul 2025 12:19 AM
Last Updated : 08 Jul 2025 12:19 AM

சமூகநீதி விடுதிகள்: சமத்துவ சமுதாயத்துக்கு அடித்தளம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழகம் முழு​வதும் பல்​வேறு துறை​களின்​கீழ் செயல்​பட்டு வரும் ஏழை மாணவர்​களுக்​கான பள்ளி மற்​றும் கல்​லூரி விடு​தி​கள் இனிமேல் ‘சமூகநீதி விடு​தி​கள்’ என்று அழைக்​கப்​படும் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக முதல்​வர் ஸ்டா​லின் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சட்​டப்​பேர​வை​யில் கடந்த ஏப்​.29-ம் தேதி நான் பேசும்​போது, “இந்த மண்​ணின் ஆதிக்​குடிகளை இழி​வுபடுத்​தும் அடை​யாள​மாக காலனி என்ற சொல் தீண்​டா​மைக்​கான குறி​யீ​டாக​வும், வசை சொல்​லாக​வும் மாறி​யிருப்​ப​தால், அந்த சொல் அரசு ஆவணங்​களி​ல் இருந்​தும், பொது புழக்​கத்​தில் இருந்தும் நீக்​கு​வதற்கு நடவடிக்கை எடுக்​கப்​படும்“ என்று குறிப்​பிட்​டேன்.

இதை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்​தித்​து, “ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் பட்​டியலில் உள்ள சாதி பெயரில் இறுதி எழுத்​தில் முடிவடை​யும் 'N' மற்​றும் 'A' என்​ப​தற்​கு பதிலாக 'R' என பெயர் மாற்​றம் செய்து உரிய மரி​யாதையை கிடைக்க வழி​செய்​யும் வண்​ணம் உரிய சட்​டம் இயற்ற நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்’’ என வலி​யுறுத்​தினேன்.

கடந்த ஜூன் 25-ம் தேதி பள்​ளிக்​கல்வி துறை​யின் சார்​பில் ஒரு அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. பள்ளி மாணவர்​கள் இடையே சாதி, சமூக வேறு​பாடு​கள், கருத்து வேறு​பாடு​கள் வன்​முறை உணர்​வு​கள் உரு​வாவதை தடுக்​க​வும், நல்​லிணக்​கம் மற்​றும் நற்​பண்​பு​களை வளர்க்​க​வும் பின்​பற்ற வேண்​டிய வழி​முறை​கள் வகுக்​கப்​பட்டு உள்​ளன. பள்​ளி​களில் ஏற்​படும் சாதிய மோதல்​களை தடுப்​ப​தற்​கான வழி​முறை​களை ஆராய அமைக்​கப்​பட்ட முன்னாள் நீதிபதி சந்​துரு தலை​மையி​லான ஆணை​யம் பல்​வேறு பரிந்​துரைகளை வழங்​கியது.

அதில் பள்​ளி​யின் பெயரில் சாதி இருக்​கக் கூடாது, தனிமனிதர் பெயரில் வைத்​திருந்​தால் அந்த பெயரோடும் சாதி இருக்​கக் கூடாது என்று சொல்​லப்​பட்டு இருந்​தது. இதை தமிழக அரசு நன்கு பரிசீலித்​தது. நமது சமு​தா​யத்​தின் பல்​வேறு பின்​தங்​கிய பிரிவு​களை சேர்ந்த மாணவ, மாணவி​கள் தொடர்ந்து கல்வி பயில, நமது மாநிலம் முழுவதும் பல்​வேறு அரசு துறை​களின்​கீழ் பள்ளி மற்​றும் கல்​லூரி மாணவ மாணவி​கள் விடு​தி​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இதன்​படி 2,739 விடு​தி​களில் 1.79 லட்​சம்பேர் தங்கி பயின்று பயன்​பெற்று வரு​கின்​றனர்.

அரசு எடுத்து வரும் பல்​வேறு நடவடிக்​கை​களின் தொடர்ச்​சி​யாக, தற்​போது பல்​வேறு சாதி சமய பிரிவு​களின் பெயர்​களின்​கீழ் செயல்​பட்டு வரும் மாணவர் விடு​தி​களின் பெயர்​களை மாற்ற தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது. இதன்​படி, பல்​வேறு துறை​களின்​கீழ் செயல்​பட்டு வரும் ஏழை மாணவர்​களுக்​கான பள்ளி மற்​றும் கல்​லூரி விடு​தி​கள் ‘சமூகநீதி விடு​தி​கள்’ என்ற பொது பெய​ரால் இனி அழைக்​கப்​படும். மாணர்​களுக்​கான உரிமை​கள், சலுகைகள், உதவி​கள் அனைத்​தும் அப்​படியே தொடரும்.

இவ்​விடு​தி​களில் நமது பெரும் தலை​வர்​களின் பெயர் சூட்​டப்​பட்டு செயல்​பட்டு வரும் சில விடு​தி​களும் உள்​ளன. அந்த விடு​தி​கள் அந்த ​தலை​வர்​களின் பெயரோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்​கப்​படும். தற்​கால இளம் சந்​த​தி​யினர் அனை​வரும் சாதி வேறு​பாடின்றி ஒன்​றிணைந்​து, எதிர்​கால தமிழ் சமு​தா​யத்​தை, சமத்​துவ சமு​தாய​மாக கட்​டமைக்க இந்த முயற்​சிகள்​ அடித்​தளம்​ அமைக்​கும். இவ்​வாறு முதல்வர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x