Published : 07 Jul 2025 06:11 AM
Last Updated : 07 Jul 2025 06:11 AM
தஞ்சாவூர்: தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்புவனம் அஜித்குமார் உயிரிழப்பில் பெரும் மர்மம் இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி யார்? முழுமையான விசாரணை மூலம் இந்த மர்மங்களுக்கு விடைகாண வேண்டும்.மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆசிரியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தமாகா மற்றும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள்தான் உள்ளன. பழனிசாமி கூட்டணித் தலைவராக இருக்கிறார். இதை அமித்ஷா உறுதிபடுத்தியுள்ளார். தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டார்கள். அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படையாக பேசத் தொடங்கிவிட்டனர். எனவே, எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கோவையில் இன்று பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிப்பார்கள். பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளமாக அமையும்.
காவிரி கடைமடை வரை தண்ணீர் சென்று சேராததால், பல இடங்களில் பயிர்கள் கருகி வருகின்றன. எனவே, கடைமடை வரை தண்ணீர் செல்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT