Published : 04 Jul 2025 09:33 AM
Last Updated : 04 Jul 2025 09:33 AM

திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை

சென்னை: காவல் நிலையத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் பேக்கரி நடத்தி வரும் சிவாஜி என்பவர், மதுமிதா என்பவருக்கு செல்போனில் தகாத வார்த்தைகளால் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுமிதா, கர்ப்பிணியான தனது தோழி செவ்வந்தி, தனம் ஆகியோருடன் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது, ராமர் என்ற காவலர், மூவரையும் தாக்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே காவலர் பெண்களை தாக்கிய காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில் விவகாரத்தை தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்த 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x