Published : 04 Jul 2025 01:55 AM
Last Updated : 04 Jul 2025 01:55 AM
சென்னை: கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலராகப் பணியாற்றியவர் அஜித் குமார். இவர், காரில் இருந்த 10 பவுன் நகைகளை திருடியதாக மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீஸார் தாக்கியதில் மரணமடைந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
6 வாரங்களுக்குள் அறிக்கை: இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி-க்கு, மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT