Published : 03 Jul 2025 06:36 AM
Last Updated : 03 Jul 2025 06:36 AM
மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்தபோது, இவர் குறித்து சமூக வலை தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு கருத்துகளை பதிவிட்டனர்.
இதையடுத்து சீமானுக்கு எதிராக திருச்சி 4-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் டிஜஜி வருண்குமார் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி சீமான் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
அதில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும்போது, வருண்குமாரின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்
தேன். இதற்காக எனக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் டிஜஜி வருண்குமார் என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என நீதித்துறை நடுவரை கேட்டுக்கொண்டேன்.
எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஒரு காவல் அதிகாரி போல் செயல்படாமல், அரசியல்வாதி போல் செயல்பட்டு பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் நாம் தமிழர் கட்சி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளார். காவல்துறையில் பணிபுரிபவர்கள் அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட கருத்து களில் தலையிடவோ, குறுக்கிடவோ உரிமையில்லை.
மனுவில் வருண்குமார் கூறியபடி அவர் மீது நான் எந்த அவதூறு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. இதனால் திருச்சி நீதிமன்றத்தி்ல் எனக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எல். விக்டோரியா கவுரி விசாரித்தார். பின்னர் நீதிபதி, திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சீமானுக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், டிஜஜி வருண்குமார் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஆக.4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT