Published : 03 Jul 2025 02:00 AM
Last Updated : 03 Jul 2025 02:00 AM
சென்னை: தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே வெடித்து தீயை அணைக்கும் வகையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பந்து வடிவிலான நவீன தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் டிஜிபி அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த கருவி பொருத்தப்பட உள்ளது.
சென்னை காவல் ஆணையரகத்தின் தலைமை அலுவலகம் வேப்பேரியில் 8 தளங்களுடன் உள்ளது. தரை தளத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை தினங்கள் தவிர தினமும் காவல் ஆணையர் தரப்பில் பெற்றுக் கொள்ளப்படுகிறது. மற்ற தளங்களில் சைபர் க்ரைம், மத்திய குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல், போலீஸ் அதிகாரிகளுக்கான நூற்றுக்கணக்கான அறைகள் உள்ளன.
8-வது தளத்தில் காவல் ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர்களுக்கென தனித்தனி அலுவலகம் உள்ளது. காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரிகின்றனர். இதுபோக அமைச்சுப் பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். பல்வேறு வழக்கு தொடர்பான முக்கியமான ஆவணங்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டால் பெரிய அளவிலான அசம்பாவிதம் மற்றும் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள 8 தளங்களிலும் பல்வேறு இடங்களில் ‘AFO’ (ஆட்டோ ஃபயர் ஆஃப் ஃபயர் எக்ஸ்டிங்குஷர் பால்) எனப்படும் கால்பந்து வடிவிலான ‘தீயை அணைக்கும் தானியங்கி நவீன கருவி’ பொருத்தப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தால், வெப்பத்தால் பந்து வடிவிலான தானியங்கி தீயணைப்பு கருவி தானாகவே வெடித்து சிதறும். பின்னர், அதற்குள் இருக்கும் வெள்ளை நிற ரசாயன பொருள் வெளிப்பட்டு தீயை அணைத்துவிடும். தீ விபத்து ஏற்படும் சூழலில், யார் வேண்டுமானாலும் இந்த கருவியை எளிதாக தீயில் வீசலாம் அல்லது உருட்டி விடலாம். இதன்மூலம் பெரிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டால் கூட தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ அணைந்து விடும். இது மிகப்பெரிய பாதுகாப்பு அம்சம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘பந்து வடிவிலான இந்த தீயணைப்பு கருவியை தீயில் எறிந்தவுடன், 3 முதல் 5 விநாடிகளில் தானாகவே வெடித்து, ரசாயன பொருளை வெளியிட்டு தீயை அணைக்கும் திறன் கொண்டது.
இது தீயை அணைக்கும் எளிய மற்றும் பாதுகாப்பான வழியாகும். இந்த கருவி விரைவில் டிஜிபி அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகங்களில் பொருத்தப்பட உள்ளன’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT