Published : 02 Jul 2025 06:09 AM
Last Updated : 02 Jul 2025 06:09 AM
திருப்பூர்: அரசியல் அழுத்தங்கள் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டனைச் சேர்ந்தவர் கவின்குமார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). திருமணமான 3 மாதங்களில் ரிதன்யா விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
தனது தற்கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் எனக் கூறி தந்தைக்கு வாட்ஸ்அப் ஆடியோ பதிவு அனுப்பியிருந்தார். இதையடுத்து, ரிதன்யா கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியைக் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ரிதன்யா குடும்பத்தினர் கூறியதாவது: திருமணமான 20 நாட்களில் நள்ளிரவில் பிரச்சினை ஏற்பட்டு ரிதன்யா வீட்டுக்கு வந்தார். அப்போதே அவர் நிம்மதியை தொலைத்து விட்டார். ரிதன்யா உடலை பிரேதப்பரிசோதனை செய்யும் வரை, போலீஸார் விசாரணை முறையாக நடந்தது.பின்னர், உடல்நிலையைக் காரணம் காட்டி சித்ரா தேவியை விடுவித்துள்ளனர்.
இதை ஏற்க முடியாது. ஏனெனில், குடும்பத்தில் நடந்த விஷயங்கள் அனைத்துக்கும் மூலகாரணமாக இருந்தவர்களுள் ஒருவர் மாமியார் சித்ராதேவி. ரிதன்யா சடலத்தைப்பெறும்வரை 3 பேர் கைது என்று சொல்லிவந்த போலீஸார், சடலத்தைப் பெற்றதும் 2 பேரை மட்டும் கைது செய்துவிட்டு, சித்ராதேவியை விடுவித்துள்ளனர். அவரையும் கைது செய்ய வேண்டும்.
அரசியல் அழுத்தங்களால் இந்த வழக்கை கிடப்பில் போடுவதற்கான முகாந்திரங்கள் உள்ளன. ரிதன்யா உயிரிழப்பில் உரிய நீதியை பெற்றுத்தர வேண்டும். போலீஸார் விசாரணை, கோட்டாட்சியர் விசாரணையில் நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் எங்க ளுக்கு இருப்பதால், முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு, உரிய நீதி பெற்றுத்தர வேண்டும் அல்லது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT