Published : 02 Jul 2025 05:29 AM
Last Updated : 02 Jul 2025 05:29 AM
சிவகங்கை: சாத்தான்குளம் சம்பவம்போல மடப்புரத்தில் மற்றொரு சம்பவம் நடைபெற்றதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத் தான் குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை நடத்தி வந்த இருவரையும் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி சிறிய வாக்குவாத பிரச்சினைக்காக போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இருவரையும் காவல் நிலையத்திலேயே போலீஸார் கொடூரமாகத் தாக்கினர். சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடையச் செய்தது. தற்போதைய முதல்வரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள், திரைப்பட பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலதரப்பிலும் கடும்கண்டன குரல்கள் எழுந்தன. இதனால் அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
காவல் துறையினர் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு 2021 மார்ச் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இன்னும் வழக்கு விசாரணை முடியவில்லை. அதேநேரம் இருவரின் குடும் பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் மற்றும் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதேபோன்ற சம்பவம் திமுக ஆட்சியில் மடப்புரத்தில் நடந்தேறியுள்ளது.
போலீஸார், கோயில் காவலாளியை கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதற்கு அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, தவெக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆட்சி மாறினாலும், போலீஸ் விசாரணை உயிரிழப்புகளும், காவல் நிலைய உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சாத்தான்குளத்தில் 2 பேர் உயிரிழந்தபோது அங்கு சென்ற ஸ்டாலின், கனிமொழி, ஏன் மடப்புரம் காவலாளி உயிரிழந்தபோது வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சாத்தான்குளம் வழக்கைபோல் தாமதப்படுத்தாமல், மடப்புரம் அஜித்குமார் உயிரிழப்பு வழக்கில் விரைந்து நீதி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 24 போலீஸ் விசாரணை மற்றும் காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
உள்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், இதுபோன்ற மரணங்கள் ஏற்படாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, தனிப்படை போலீஸார் கோயில் மாட்டுத் தொழுவத்தில் அஜித்குமாரை கடுமையாகத் தாக்கியதை, கோயில் ஊழியர் அருகேயுள்ள கழிப்பறையில் பதுங்கியிருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இவ்வழக்கில் முக்கிய ஆதாரமாகவும், திருப்பு முனையாகவும் மாறியுள்ளது.
சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்: போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி உயிரிழந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதை தொடர்ந்து, தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலர் தீரஜ்குமார் உத்தர விட்டார். மேலும், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT