Published : 01 Jul 2025 05:30 PM
Last Updated : 01 Jul 2025 05:30 PM

ஞானசேகரன் குறித்த ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி 

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், “ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய அண்ணாமலை அதனை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் வழங்கவில்லை. இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்,” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அவர் யார் யாரிடம் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி அனைத்து ஆதாரங்களையும் பெற்று விசாரிக்க வேண்டும்.” என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன. அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டுமா? இதுபோல வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டுமென்றால் தினமும் நூறு வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டி வரும். இதற்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

அரசியல்வாதிகள் தெரிவிக்கும் இதுபோன்ற கருத்துகளை புறக்கணிக்க வேண்டும். ஞானசேகரனுக்கு எதிரான வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x