Last Updated : 01 Jul, 2025 01:58 PM

6  

Published : 01 Jul 2025 01:58 PM
Last Updated : 01 Jul 2025 01:58 PM

அஜித்குமார் கொலை வழக்கு: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

மதுரை: மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இறந்த அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதையடுத்து அஜித்குமார் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, ராமச்சந்திரன், சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணி மாநில இணைச் செயலாளர் மாரீஸ்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், போலீஸாரால் தாக்கப்பட்ட கோயில் ஊழியர் அஜித்குமார் என்ன தீவிரவாதியா?. ஆயுதம் ஏந்தி தாக்கினால் தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை கூட ஏற்கலாம். ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞரை கடுமையாக தாக்கியது ஏன்? என கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு இன்று (ஜூலை 1) மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் வழக்கறிஞர் ஹென்றிடிபேன் வாதிடுகையில், “சிறப்புப் படை போலீஸார் பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு அஜித்குமாரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். முகத்திலும், ஆண் உறுப்பிலும் மிளகாய்பொடி தூவியுள்ளனர். திருப்புவனம் அரசு மருத்துவமனையிலேயே அஜித்குமார் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், உடலை அங்கு வைக்காமல், மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இது முழுக்க முழுக்க சட்ட விரோதமாக நிகழ்ந்த காவல் மரணம். தலைமைக் காவலர் கண்ணன், மானாமதுரை டிஎஸ்.பி-யின் சிறப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் அங்கிருந்து திருப்புவனம் வந்து விசாரித்ததை விதிமீறலாகவே பார்க்க வேண்டும்.

அஜித்குமார் இறந்த பிறகு திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் நகர திமுக செயலர் மகேந்திரன் மற்றும் காளீஸ்வரன், மானாமதுரை டி.எஸ்.பி ஆகியோர் அஜித்குமார் குடும்பத்தினர் மற்றும் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து ரூ.50 லட்சம் பணம், முன்பணமாக ரூ.10 லட்சம், சகோதரருக்கு அரசு வேலை தருவதாக பேரம் பேசியுள்ளனர்” என்றார்.

பின்னர், மடப்புரம் கோயில் வளாகத்தில் அஜித்குமாரை போலீஸார் கொடூரமாக தாக்கும் வீடியோ பதிவை நீதிபதிகளிடம் வழங்கினார். வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிடுகையில், “இந்த வழக்கில் அஜித்குமாரை நன்கு கவனிக்குமாறு சிவகங்கை மாவட்ட எஸ்பி மற்றும் திருப்புவனம் காவல் ஆய்வாளர் கூறியதாக தனிப்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் கூறியுள்ளார். இந்த வழக்கின் புகார்தாரர் நிகிதா, ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினர். அதனால் அஜித்குமார் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

பின்னர் நீதிபதிகள், “நகை காணாமல்போன வழக்கில் ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. யாருடைய உத்தரவின் பேரில் விசாரணை சிறப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறப்புப் படை போலீஸார் அவர்களாகவே விசாரிக்கலாமா?” என்றனர்.

அரசுத் தரப்பில், “புகார்தாரர் ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் அல்ல. அவரது தாயார் ஒரு மாற்றுத் திறனாளி. முதல்கட்ட விசாரணை முடிந்த பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டல் உள்ளது. அதனால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. சமூக வலைதளங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்புப் படையினர் விசாரணை நடத்தியுள்ளனர்” என்றார்.

அதற்கு நீதிபதி, “காவல் துறையினர் மாமூல் வாங்குவது தொடர்பாக வீடியோக்கள் ஏராளம் வலம் வருகின்றன. அது தொடர்பாக சிறப்புப் படை விசாரித்து லஞ்சம் வாங்குவதை நிறுத்தலாமே? விசாரணையை சிறப்புப் படையிடம் ஒப்படைத்தது யார்? அஜித்குமாரை 2 நாட்கள் வெவ்வெறு இடங்களுக்குக் கொண்டுசெல்ல சிறப்புப் படைக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அப்பகுதி மக்களிடம் விசாரிக்க நீதித்துறை நடுவரை ஏன் அனுமதிக்கவில்லை?

மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. எஸ்பியை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பியது ஏன்? விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதுதானே? ஒட்டுமொத்த காவல் அமைப்பையும் குறை சொல்லவில்லை. மக்களைக் காக்கவே காவல் துறை. அவர்களே மக்களைத் தாக்கினால், அதன் நோக்கம் இல்லாமல் போய்விடும். சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களைக் காக்கவே, அவர்களது நலனுக்கே என்பதை காவல் துறையினர் கருத்தில்கொள்ள வேண்டும். தமிழகம் அதிக கல்வியறிவு கொண்டவர்கள் உள்ள மாநிலம். இருப்பினும் இதுபோல் நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல” என்றனர்.

அரசுத் தரப்பில், “தவறு செய்தோர் மீது நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்தோருக்கு ஒருபோதும் அரசு ஆதரவாக இருக்காது” எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், “இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. சட்டவிரோத காவல் மரணம், அடிப்படை உரிமைக்கு எதிரானது.

சட்டவிரோத காவல் மரணங்களை நீதிமன்றம் கடுமையாகப் பார்க்கிறது. இதனால் திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும், மடப்புரம் கோயில் வீடியோ பதிவை கோயில் செயல் அலுவலர் தாக்கல் செய்யவும், அஜித்குமார் பிரேதப் பரிசோதனை அறிக்கையை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் தாக்கல் செய்ய வேண்டும். அஜித்குமாரின் உயிரிழப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இல்லையெனில் மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும்” என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x